தேர்தல் பத்திர அனைத்து விவரங்களையும் மார்ச் 21-க்குள் அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவால் வேறு வழியின்றி எஸ்பிஐ வங்கி மார்ச் 12-ஆம் தேதி மாலை தேர்தல் பத்திர திட்டத்தின் அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. தொடர்ந்து மார்ச் 13-ஆம் தேதி தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இந்த விவரங்களை கடந்த மார்ச் 14-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதில், நன்கொடை வழங்கிய நிறுவனங்கள், தனிநபர்களின் பெயருடன் ஒரு பட்டியல், கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்துடன் ஒரு பட்டியல் என 2 பட்டியல்கள் இடம்பெற்றன. ஆனால், தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ முழுமையாக வெளியிடவில்லை. பத்திரங்களின் பிரத்யேக எண்ணை குறிப்பிடப்படவில்லை. தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடையைப் பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது என்ற நிலையில், அதனை எஸ்.பி.ஐ வங்கி வெளியிடாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திர எண்களை எஸ்.பி.ஐ வெளியிடாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும் என்றும் இதுகுறித்து இன்று விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ-யின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை. ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண், தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்களின் பெயர் உள்பட அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ கட்டாயம் வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரம் சார்ந்த அனைத்து விவரங்களையும் மார்ச் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் எஸ்.பி.ஐ வெளியிட வேண்டும். எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். எஸ்.பி.ஐ-யிடமிருந்து தகவல் கிடைத்தவுடன், அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் உடனடியாக அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.