india

img

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31 ம் தேதிக்குள் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை வரும் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 
நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை வழங்கும் ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் குடும்பஅட்டை மூலம் ரேஷன்களில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். 
இந்த திட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நிதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர் ஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குபின் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு கூடுதலாக உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும்.
முறைசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களை பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்கான திட்டத்தை தயாரித்து ஜூலை 31க்குள் வெளியிட வேண்டும். இதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் உதவி திட்டத்தை கோவிட் பெருந்தொற்று முடியும் வரை செயல்படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள், ஜூலை 31-ம் தேதிகுள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் புலம் பெயர் தொழிலாளர்கள் உணவு தானியங்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

;