india

img

ஒட்டு கேட்பது, வேவு பார்ப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது -  சு.வெங்கடேசன் எம்.பி ஒத்திவைப்பு தீர்மானம்

ஒன்றிய அரசே ஒட்டு கேட்பதை, வேவு பார்ப்பதை நிறுத்து. ஒட்டு கேட்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. குழுமத் தயாரிப்பான ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ (Pegasus spyware) என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் நீதிபதிகள் என பல்வேறு தரப்பினரையும் ஒன்றிய அரசு வேவு பார்க்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒட்டு கேட்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தனி நபர் உரிமைகளுக்கு எதிரானது. சனநாயகத்திற்கு எதிரானது.

இஸ்ரேலிய பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்படும் 5,000 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , உயர்மட்ட பொறுப்புகளை வகித்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய ஊடகவியலாளர்கள் 40 பேரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக செய்தி. இது அதிர்ச்சி அளிக்கிற செய்தி.
இஸ்ரேலிய ஐ.பி.ஓ நிறுவனம் தாங்கள் இந்த உளவு மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அப்படியெனில் வேறு யார் வேவு பார்த்திருக்க முடியும்? அரசை நோக்கியே சுட்டு விரல்கள் நீள்கின்றன. எனவே இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றை முன் மொழிந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

;