india

img

உரியப் பாதுகாப்புகளுடன் பள்ளிகளை படிப்படியாகத் திறக்கலாம் - ஐசிஎம்ஆர் கருத்து 

சிறுவர்களுக்கு கொரோனாவால் மோசமான பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ ஏற்படுவது அரிது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர்களின் கருத்து, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவில் 500 நாட்களுக்கு மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 32 கோடி சிறுவர், சிறுமியர் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஐசிஎம்ஆர், பள்ளிகள் மூடப்பட்டதால் கிராமப்புற சிறுவர், சிறுமியர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.மேலும், இது போன்ற சூழலில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளைத் திறப்பது நல்லது என்றும், ஆரம்பப் பள்ளிகளிலிருந்து இதைத் தொடங்கலாம் என்றும், காற்றோட்டமாகவும் இருக்கைகளிடையே இடைவெளி மிகுந்ததாகவும் வகுப்பறைகள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

மேலும், மாணாக்கர், ஆசிரியரின் உடல் வெப்ப நிலையைக் கண்காணிப்பதுடன் கொரோனா பரிசோதனைகள் செய்யும் வசதியும் பள்ளிகளில் இருக்க வேண்டும் என்றும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் முகக்கவசத்தை அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் நெருக்கமாக அமர்ந்து உணவுகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.  

அதனை தொடர்ந்து, சிறுவர்களுக்கு கொரோனாவால் மோசமான பாதிப்புகளோ உயிரிழப்புகளோ ஏற்படும் வாய்ப்பு அரிதிலும் அரிது என்று கூறியுள்ள நிபுணர் குழு, பள்ளிகளால் கொரோனா பரவவில்லை என்பது இதுவரையிலான அனுபவத்தில் தெரியவந்துள்ளதாகவும், எனவே உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை படிப்படியாகத் திறக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

;