india

img

இந்தியர்கள் 7ல் ஒருவருக்கு மனநோய்- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்தியர்களில் ஏறக்குறைய 7 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 
இந்தியாவில் மாநில அளவில் மனநோய் தாக்கத்துக்கு ஆளாவது குறித்து கடந்த 1990ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், லண்டனை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
அதில் இந்தியாவில் கடந்த 1990 முதல் நடத்தப்பட்ட ஆய்வில், 2017ல்  மனநோய்  தாக்கம் இரட்டிப்பாகி உள்ளது. இதில் பதற்றமும், மனக்கவலையும் பட்டியலில் முதலிடங்களை பிடித்துள்ளன. பதற்றம், மனக்கவலை, மனச்சிதைவு, பித்து பிடித்தல், அறிவு சார்ந்த வளர்ச்சி இல்லாமை, நடத்தை கோளாறு, மன இறுக்கம் ஆகியவையும் நோய் தாக்கத்துக்கு காரணமான மனநோய்களாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மனக்கவலை வயதானவர்களிடையே அதிகளவு நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுவே இந்தியாவில் அதிகளவு தற்கொலைக்கு தூண்டும் காரணியாகவும் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு, இந்தியாவில் 19.7 கோடி பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 7 பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இவர்களில் 4.6 கோடி பேர் மனக்கவலையினாலும், 4.5 கோடி பேர் பதற்றத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், குழந்தைகளிடையே முறை தவறிய நடத்தை, அறிவு சார்ந்த வளர்ச்சியின்மை, மன இறுக்கம் ஆகியவை அதிக நோய் தாக்கத்தை உண்டாக்குகிறது. அதிலும் குறிப்பாக வட இந்திய குழந்தைகள் மத்தியில் இவை பரவலாக காணப்படுகிறது. இவ்வாறு ஆய்வறிக்கை அதில் கூறப்பட்டுள்ளது. 

 

;