ஐந்தாண்டு ரயில் விபத்துகளில் ஒரு இறப்பு இன்சூரன்ஸ் உரிமம் கூட வழங்கப்படவில்லை
நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்
ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்குவதில் ஒன்றிய அரசு காட்டும் அலட்சியம் நாடாளுமன்றத்தில் அம்பலமாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில், நிர்வாகத்தின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கடந்த பத்தாண்டு காலத்தில் (2014-15 முதல் 2023-24 வரை) 678 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 748 பேர் உயிரிழந்துள்ளனர், 2,087 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் (2019 நவம்பர் முதல் 2024 அக்டோபர் வரை) வெறும் 22 பேர் மட்டுமே இன்சூரன்ஸ் உரிமைகளை கோரியுள்ளனர். மிக அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த காலகட்டத்தில் ஒரு இறப்பு இன்சூரன்ஸ் உரிமம் கூட வழங்கப்படவில்லை என்பதுதான்.
பொருத்தமற்ற ஒப்பீடு
அமைச்சரின் பதில், கேள்விகளை திசைதிருப்பும் முயற்சியாகவே தெரிகிறது. ஐந்தாண்டு கால விவரங்கள் கேட்கப்பட்ட போதிலும், இருபது ஆண்டுகால புள்ளிவிவரங்களை அளித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை ஒப்பிட்டு, தற்போதைய அரசின் காலத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக காட்ட முயற்சித்துள்ளார். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காலகட்டத்தில் இத்தகைய ஒப்பீடு பொருத்தமற்றது.
விபத்துகள் குறித்த விசாரணைகள் பற்றியும் அமைச்சர் மிகவும் மேலோட்டமான பதிலையே அளித்துள்ளார். “பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்ற பொதுவான வாசகத்தைத் தவிர, எந்த குறிப்பிட்ட நடவடிக்கைகளும் தெரிவிக்கப்படவில்லை. ரயில்வே பாதுகாப்பு மேம்பாடுகள், புதிய தொழில்நுட்ப பயன்பாடு, நிதி ஒதுக்கீடு போன்ற முக்கிய விவரங்கள் எதுவும் பதிலில் இடம்பெறவில்லை.
பொறுப்பை கைகழுவும் அரசு
இன்சூரன்ஸ் பரவலாக்கம் குறித்து பெரிதாக பேசும் ஒன்றிய அரசு, நடைமுறையில் அதனை செயல்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது. பயணிகள் நேரடியாக இணையத்தில் பாலிசி எடுத்துக் கொள்வதாகவும், இன்சூரன்ஸ் நிறுவனங்களே உரிமைகளை வழங்குவதாகவும் கூறி அரசு தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முயல்கிறது. இறந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஒரு இன்சூரன்ஸ் உரிமம் கூட வழங்கப்படவில்லை என்பது, அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.
இந்த விவகாரம், ரயில்வே துறையின் பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் முறையில் அடிப்படை மாற்றங்கள் தேவை என்பதை உணர்த்துகிறது; பயணிகளின் உயிர் பாதுகாப்பு மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் குறித்து ஒன்றிய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது என வலியுறுத்துகிறார் சு.வெங்கடேசன் எம்.பி.
நாட்டின் நீதித்துறை அமைப்பில் நிலவும் கடுமையான நீதிபதி பற்றாக்குறை மற்றும் வழக்குகள் தேக்கம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிவந்துள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய இணை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் அளித்த பதில், நீதித்துறையின் அவல நிலையை படம்பிடித்துக் காட்டியுள்ளது.
32 % காலி
நாட்டின் 25 உயர்நீதிமன்றங்களில், வெறும் மூன்று சிறிய மாநில உயர்நீதிமன்றங்களில் (மேகாலயா, சிக்கிம், திரிபுரா) மட்டுமே நீதிபதிகளின் எண்ணிக்கை முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 1,122 உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில், 757 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 32 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.
மிக மோசமான நிலை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் காணப்படுகிறது. அங்கு 10,67,614 வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், 160 நீதிபதி பணியிடங்களில் வெறும் 81 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. குஜராத் உயர்நீதிமன்றத்தில் 52 பணியிடங்களில் 32 பணியிடங்களும், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 50 பணியிடங்களில் 30 பணியிடங்களும் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஓரளவு சிறப்பாக செயல்படுகிறது - 75 பணியிடங்களில் 66 நிரப்பப்பட்டுள்ளன.
மிக கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 61 லட்சம் வழக்குகளில், 27 லட்சம் வழக்குகள் (44 சதவீதம்) ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தீர்ப்பின்றி கிடக்கின்றன. இந்த நிலை உச்சநீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் காணப்படுகிறது.
1.43 கோடி வழக்குகள்
உச்சநீதிமன்றத்தில் 19,569 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 1,15,96,339 வழக்குகளும் ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. மொத்தத்தில், நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் சேர்த்து 1.43 கோடி வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தீர்ப்பின்றி உள்ளன.
இந்த புள்ளிவிவரங்கள், இந்திய நீதித்துறையின் அவலநிலையை வெளிப்படுத்துகின்றன. சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் நீதி பெறுவதற்கு நெடுங்காலம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கி றது. நீதி தாமதம் என்பது நீதி மறுப்பே என்ற கூற்றுக்கு இணங்க, ஒன்றிய அரசு உடனடியாக நீதிபதிகளின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது என சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.