புதுதில்லி, பிப். 22- தில்லி, ஹரியானா, குஜராத், கோவா ஆகிய 4 மாநிலங்களில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
மோடியின் பாஜக அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள “இந்தியா” கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதனன்று உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு பெற்ற நிலையில், தில்லி, ஹரியானா, குஜராத், கோவா ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு வியாழனன்று நிறைவு பெற்றது.
தில்லி : 7 தொகுதிகளை கொண்ட தில்லியில் ஆம்ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஹரியானா : 10 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. சண்டிகர் : ஒரே ஒரு தொகுதியை கொண்ட சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. குஜராத் : 26 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 2 தொகுதியிலும் களமிறங்குகின்றன.
கோவா : 2 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. 13 தொகுதிகளைங்க கொண்ட பஞ்சாப்பில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்து அங்கு தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.