india

img

தனியார் துறைக்கு 25 சதவீதம் தடுப்பூசிகள் என்பதை விலக்கிக் கொள்க: அனைவருக்கும் இலவச தடுப்பூசித் திட்டத்தை அறிவித்திடு! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூன் 8-

மத்திய அரசு தனியார் துறைக்கு 25 சதவீதம் தடுப்பூசிகள் அளிக்கப்படும் என்று கூறியிருப்பதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், நாட்டிலுள்ள அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகளை செலுத்திடுத் திட்டத்தை அறிவித்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

மோடி அரசாங்கம், தடுப்பூசிக் கொள்கையின் மீது உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனம், மாநில அரசாங்கங்களிடமிருந்து வந்த கடும் எதிர்ப்பு மற்றும் நிர்ப்பந்தங்கள் காரணமாக தன்னுடைய பிழையான, பேரழிவுதரத்தக்க “தாராளமயப்படுத்தப்பட்ட தடுப்பூசிக் கொள்கையை” விலக்கிக்கொள்ள நிர்ப்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறது. எனினும் அதனை, அனைத்துக் குடிமக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்கச் செய்ய வேண்டியிருக்கிறது. 

 

பிரதமர் தன்னுடைய தேசிய ஒளிபரப்பின்மூலமாக,  மாநில அரசாங்கங்களுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்கள் கூறியிருந்தார். மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான பொறுப்புகளை அவற்றின்மீது ஏற்றியிருந்தார். இதுபோன்ற கண்டிக்கத்தக்க முயற்சிகளை மக்கள் நிராகரித்திடுவார்கள். “தாராளமயப்படுத்தப்பட்ட தடுப்பூசிக் கொள்கை” என்பது மத்திய அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான முடிவாகும்.

 

எனினும், இவர்களின் தோல்வியடைந்துவிட்ட தடுப்பூசிக் கொள்கை முற்றிலுமாக ரத்துசெய்யப்படவில்லை. அரசாங்கம் தொடர்ந்து தன்னுடைய இரட்டை விலைக் கொள்கையைத் தொடரவே நடவடிக்கை எடுத்திருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதத்தை இப்போதும் தனியார்துறைக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது தனியார் உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதன்மூலம் சூறையாடுவதற்கு உரிமம் அளிப்பதைத் தவிர வேறல்ல. மேலும், தடுப்பூசிப் பற்றாக்குறை, கடுமையாக இருக்கும் நிலையில், இதுபோன்ற கொள்கையைத் தொடர்வது, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையைத் தடுத்திட அனைவருக்கும் தடுப்பூசிச் செலுத்தப்படுவது அவசியத் தேவை என்பதை நீர்த்துப்போகச் செய்கிறது, பலவீனப்படுத்துகிறது. பணக்காரர்கள் மட்டுமே அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் அதிக விலை கொடுத்து தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ள முடியும்.    

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனியார்துறைக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோருகிறது. மத்திய அரசாங்கம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துத் தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்திட வேண்டும். மற்றும் உலக அளவிலும் வாங்கிட வேண்டும். அவற்றை மாநில அரசாங்கங்களுடன் கலந்துபேசி, அவற்றுக்கு விநியோகித்திட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

 

(ந.நி.)

;