புதுதில்லி, டிச. 19 - மிக்ஜம் புயல் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிகமோசமான பாதிப்பைச் சந்தித்த நிலையில், அடுத்த ஒருவாரத்திற்கு உள்ளாகவே, குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு (upper air cyclonic circulation) சுழற்சி காரணமாக 95 செ.மீ. வரை கொட்டித் தீர்த்த அதிகனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் இதுவரை காணாத பேரழிவைச் சந்தித்துள்ளன. வீடுகள், தெருக்கள், சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதுமட்டுமன்றி, நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு என அனைத்துப் பயிர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மிகப்பெரிய அளவிற்கான பொருளாதாரப் பாதிப்பை அதிகனமழை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகளைக் கூட விரைந்து மேற்கொள்ள முடியாத அளவிற்கு மோசமான பாதிப்பை வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மழை சற்றுக் குறைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் படகுகள் மற்றும் கனரக வாகனங்கள் மூலமும், வீட்டின் மேல்மாடிகளில் தங்கியிருந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமும் விரைந்து மீட்கப்பட்டு வருகின்றனர். 2 நாட்களாக உணவு, குடிநீரின்றி தவித்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியிலும், மீட்பு நடவடிக்கையிலும் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அரசு ஊழியர்கள், மீட்புப் படையினர், தன்னார்வலர்கள் களமிறக்கப்பட்டு, அவர்கள் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு, வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்கும் வகையில், தமிழகத்திற்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது, “டிசம்பர் 4 அன்று ஏற்பட்ட புயலாலும் கன மழையாலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளச் சேதங்களைச் சரி செய்ய உடனடியாக 5 ஆயிரத்து 60 கோடி ரூபாய் கேட்டிருந்தேன். ஆனால் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய 450 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் பணிகளை மேற்கொள்ள ரூ. 12,059 கோடியும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
இதுகுறித்து பிரதமர் மோடியை நேரில் சந்திக்கலாம் என எண்ணிய போது அடுத்த பேரிடராக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான மழை பெய்துள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது. மழைப்பொழிவு கடுமையான உடனே 8 அமைச்சர்கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மீட்புப்பணிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மீட்புப்படைகள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 12,653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பெருமழையிலும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், மீட்புப்பணிகளையும் நானும், தலைமைச்செயலாளரும் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்புகொண்டு கண்காணித்து வருகிறோம். தென் மாவட்டங்களில் 60 ஆண்டுகளாக இல்லாத மழை பெய்துள்ளது. எதிர்பாராதது இது.
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களது வாழ்வாதாரங்களை திரும்ப உருவாக்க உடனடி நிவாரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உதவி செய்திட மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் கோரிக்கை விடுக்க இருக்கிறேன். அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ள நிலையில், இவற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்தும் ஒன்றிய அரசு வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்த இருக்கிறேன். கடந்த காலங்களில் கிடைக்க வேண்டிய நிவாரண நிதிகளும் கிடைக்கும் நம்பிக்கையில்தான் பிரதமரை சந்திக்கவுள்ளேன். இன்று இரவு பிரதமரை சந்தித்து வெள்ளப் பாதிப்பு நிலவரங்களை தெரிவித்துவிட்டு புதனன்று நான் தூத்துக்குடி, நெல்லை பகுதிகளுக்கு செல்லவுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சாலைவழியாக செல்ல முடியாத அளவிற்கு மோசமான பேரழிவு
தென்மாவட்ட மீட்பு பணிகளுக்கு அதிகமான ஹெலிகாப்டர்களை வழங்கவும் கடிதம்!
தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அதிக எண்ணிக்கையிலான ஹெலிகாப்டர் களை அவசரமாக அனுப்ப வேண்டும் என, ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் ஒன்றை ஸ்டாலின் எழுதியுள்ளார்.
“தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 1871ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோச மாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகர ங்களில், தாமிரபரணி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணி களை மேற்கொள்ள எங்கள் அதிகாரிகளை யும், மாநில பேரிடர் மீட்பு (SDRF) படை யினரையும் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு (NDRF) படையினரையும் நாங்கள் திரட்டி யுள்ளோம். தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இப்பொருட் களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும். தற்போது விமானப்படை யின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும், சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக வும், மாயமானவர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன. பேரழிவின் மிக மோசமான தன்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் தேவைப்படு கின்றன. எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர் களை உடனடியாக நிலைநிறுத்த உங்களின் அவசர தலையீட்டை நான் வலியுறுத்துகிறேன்” என்று அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.