ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இஸ்ரேல், தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. மேற்கு ஆசிய நாடுகள் மீது வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்துவது, சர்வதேச சட்டங்களையும் ஒப்பந்தங்களையும் மீறுவது போன்ற செயல்பாடுகள், இஸ்ரேலின் அடாவடி தனத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது என்பது இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கைகள் உறுதி செய்கின்றன. இதன் நோக்கம் முழு மேற்காசிய பிராந்தியத்தின் மீதும் இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே ஆகும். அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும், அமெரிக்காவின் நேரடி அல்லது மறைமுக ஆதரவின்றி இத்தகைய தாக்குதல் சாத்தியமாகாது என்பது தெளிவாகிறது. இந்த ஆதரவு இல்லையெனில், இஸ்ரேல் இவ்வளவு தைரியமாகவும், திறனாகவும் இத்தகைய ஆக்ரோஷமான தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியாது.
இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று. ஆனால் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் அமைதியான நோக்கங்களுக்காக கூட அணு தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்வதைத் தடுக்க முயல்கிறது. இந்த தாக்குதல், ஈரானுடனான அணுசக்தி பிரச்சினைகள் குறித்த தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மத்தியில் நடைபெற்றுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல், ஈரானுடன் நடந்து வரும் அணு பேச்சுவார்த்தைகளில் தடையையும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மேலும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடந்த 20 மாதங்களாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் இன அழிப்பு போரை நடத்தி வருகிறது. இப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம், இஸ்ரேல் தனது ஆதிக்கத்திற்கு சவால் அளிக்கும் எந்த வாய்ப்பையும் முற்றிலும் அழிக்க விரும்புகிறது என்பது தெளிவாகிறது.
ஐக்கிய நாடுகள் தலைமையில், உலக நாடுகள் இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசும், இந்த தாக்குதலை உலக அளவில் கண்டித்து, இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகி இருந்தது மிகவும் வெட்கக்கேடானது. இத்தகைய வாக்களிப்பு, பிராந்தியத்தில் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை வலுப்படுத்த மட்டுமே உதவும். ஈரான் மற்றும் பாலஸ்தீனம் இரண்டுடனும் இந்தியாவிக்கு நீண்டகால உறவுகள் உள்ளன. இந்த உறவுகளை மதித்து, வலுப்படுத்தப்பட வேண்டும். பாஜக தலைமையிலான அரசு இஸ்ரேலுக்கான தனது மறைமுக ஆதரவை நிறுத்திவிட்டு, மேற்காசியாவில் அமைதி மற்றும் நீதிக்காக தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.