india

img

தேசிய கீதம் பாடாமல் வந்தே மாதரம் பாடும் சங்கிகள் தேசப்பற்று பற்றி பேசலாமா?

வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அரசியல் நிர்ணய சபை நிராகரித்தப் பாடல் அது.

இந்தியா விடுதலை பெற்றவுடன் தேசிய கீதமாக எதை தேர்வு செய்வது என்று அரசியல் நிர்ணய சபையின் முடிவுக்கு மூன்று பாடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாளான 1950 ஜனவரி 24 ம் தேதி, டாக்டர். இராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய கூட்டத்தில் பாடலை முடிவு செய்து அறிவிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

விடுதலைப் போராட்டத்தில் மூன்று பாடல்கள் மக்களால் பாடப்பெற்றது. அந்த மூன்றும் தான் அரசியல் நிர்ணய சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1.தாகூர் எழுதிய 'ஜன கண மன'.
2.மகாகவி இக்பால் எழுதிய ' ஸாரே ஜஹான் சே அச்சாஹ்'
3.பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்'

வந்தே மாதரம் பாடல் தேசத்தைப் புகழ்ந்து எழுதப்படவில்லையென்றும், அது துர்க்கையை போற்றிப்பாடும் பாடல் என்பதாலும் தேசிய கீதமாக ஏற்கவில்லை.

1947 ஆகஸ்ட் 14 இரவு இந்தியா விடுதலை பெற்ற போது, நாடாளுமன்றத்தில் திருமதி. சுவேதா கிருபாளனி, டாக்டர். சுசீலா நய்யார் ஆகியோரால் 'ஸாரே ஜஹான் சே அச்சாஹ்' என்ற பாடலே பாடப்பெற்று விடுதலை பிரகடனம் செய்யப்பட்டது. இன்றும் கூட இராணுவத்தில் பாடப்படும் பாடல் இதுதான்.

டாக்டர்.இராஜேந்திர பிரசாத் இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடலே இருக்கும் என அறிவித்தார். சுதந்திரத்திற்கு முன்பு ' காட் சேவ் தி க்வீன்' என்ற பாடலைத் தான் இந்தியா எங்கும் பாடிக் கொண்டு இருந்தனர்.

தாகூருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இரண்டு நாடுகளுக்கான தேசிய கீதத்தை எழுதியதும் அவர்தான்.
1. இந்தியாவின் 'ஜன கண மன'
2. பங்களாதேஷ் நாட்டின் தேசிய கீதமான ' அமர் ஷோனார் பாங்க்ளா'

அரசியல் நிர்ணய சபையால் நிராகரிக்கப்பட்ட ஒரு பாடலை பாடவேண்டும் எனவும், இல்லாவிட்டால்  தாக்குதல் நடத்துவதும் சங்கிகளின் வேலையாக உள்ளது. 

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பு முறையை வைத்து இந்த நாட்டை ஆர்.எஸ்.எஸ் ஆள இயலாது.
ஏனெனில் அது நாக்பூர் சட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட முனைகிறது.

வங்காளத்தின் பங்கிங் சந்திரர் எழுதிய ஆனந்தமடம் நாவலில் இடம் பெறும் பாடலே வந்தே மாதரம்
இது படிக்கலாமா வேண்டாமா என பெரிய விவாதமே நடத்தப்பட்டது
ஏனெனில் பாடலில் மூன்றாவது பகுதி துர்க்கை அம்மனை தேசத்திற்கு ஒப்பாக எழுதப்பட்டதால்.

அந்த நாவலில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ள பகுதியும் வைணவத் துறவிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தும் யுத்தக் காட்சிகளில் பாடுவது போலத்தான் இடம் பெற்றிருக்கும்

பல மதத்தினர் இருக்கும் நாட்டில்
ஒரு மதத்தினரிலும் ஒரு பிரிவினர் வணங்கும் கடவுள் வாழ்த்து பாடலாக இருப்பதால், வந்தே மாதரம் நிராகரிக்கப்பட்டு,
ஜனகனமண தேசியகீதமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சங்கிகள் தேசிய கீதத்திற்கு பதிலாக வந்தேமாதரம் தான் பாடிக் கொண்டே இருப்பார்கள்

வந்தே மாதரம் பாடலும் வங்க மொழியில் தான் முதலில் எழுதப்பட்டது. இப்போது உள்ள பாடல் சமஸ்கிருத மொழியில் உள்ளது. வங்கத்திலிருந்து சமஸ்கிருதத்திற்கு மொழி மாற்றம் செய்து பாடுகிறார்கள்.

ஜெய்ஹிந்த் என்ற குரலுக்கு எதிராகவும்
வெள்ளையனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட சவர்க்கார்.

அதிமுக ஆட்சியில் சட்டபேரவையில் ஜெய்ஹிந்த் என்று பேசி முடிக்கும் போது சொன்ன கவர்னர், தற்போது அப்படி கூறவில்லை என்று கொங்கு ஈஸ்வரன் பேசியதற்கு, பாஜகவினர் தேசப்பற்று பொங்கி எழுந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். 

தேசப்பற்றை நான் கேள்விக்குள்ளாக்கவில்லை. மொழி பற்றை கேள்விக்கு உள்ளாக்கினேன் என ஈஸ்வரன் விளக்கமளித்திருக்கிறார். பாஜக வின் தேசப்பற்று வரலாறு கொண்ட கட்சியா? 

ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் அரசு சார்ந்த கட்டாய முழக்கமல்ல. எம்டன் கப்பலில் பணியாற்றிய தமிழரான செண்பகராமனால் முதலில் முழங்கப்பட்டு, அதன் பிறகு நேதாஜியின் ஐஎன்ஏ படையினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட முழக்கம் என்பதே வரலாறு.

இதனை முதன்முதலில் உரக்க கூறிய தலைவர் நேதாஜி. 1941 நவ., 2ல், ஜெர்மனியில், இவரது 'சுதந்திர இந்தியா மையம்' துவக்க விழாவில் 'ஜெய்ஹிந்த்' (வெல்க இந்தியா) என்ற கோஷத்தை முழங்கினார். அப்போது முதல் அனைத்து இந்தியர்களிடமும் இது வாழ்த்தாக ஒலித்தது.

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் பிரிட்டனுக்கு ஆதரவாக போரிட மாட்டார்கள் என்று காந்தி அறிவித்தார். அதைத்தொடர்ந்து காந்தியின் ஆதரவைப் பெற பிரிட்டன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

அதேசமயம் 1940ல் மதுராவில் நடந்த ஹிந்து மகாசபாவின் 22 ஆவது மாநாட்டில் சாவர்க்கர் பிரிட்டனுக்கு ஆதரவாக முதன்முதலில் பகிரங்கமாகப் பேசினார். இரண்டாம் உலகயுத்தம் நடைபெறும் நிலையில், பிரிட்டனுக்கு எதிராக எந்த ஆயுதப் போராட்டத்தையும் தார்மீக அடிப்படையில்கூட ஆதரிக்கக்கூடாது என்றார். 

இந்தியாவை ராணுவரீதியாகவும், தொழில்துறை ரீதியாகவும் பிரிட்டன்தான் வலுவாக்கும் என்று நம்புவதாகக் கூறினார். பிரிட்டிஷ் ராணுவத்தில் ஹிந்துக்கள் ஏராளமாக சேரவேண்டும் என்பதால், ஹிந்து மகாசபாவே ஆளெடுப்பு நடவடிக்கைகளையும் தொடங்கும் என்றார். 

அதுமட்டுமல்ல, 1941ல் பகல்பூரில் நடைபெற்ற ஹிந்து மகாசபாவின் 23 ஆவது மாநாட்டிலும் சாவர்க்கர் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக ராணுவத்தை பலப்படுத்த, எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஹிந்துமகா சபாவின் கிளைகள் அனைத்தும் ஹிந்துக்களை ஏராளமாக பிரிட்டிஷ் ராணுவத்திலும் கடற்படை, விமானப்படைகளில் சேரும்படி செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டார்.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். படையில் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர். இந்தியாவை நோக்கி வந்த நேதாஜி படையை, அசாம் பகுதியில் தடுத்து, அதை தோற்கடிக்க வெள்ளையனோடு இணைந்து படை நடத்தியவர் சவர்க்கார். 

(சாவர்க்கர், வி. டி., "சமகிரா சாவர்க்கர் வாங்மாயா: இந்து ராஷ்டிர தரிசனம்", தொகுதி 6, மகாராஷ்டிரா பிரந்திக் இந்துசாபா, பூனா, 1963.)

சவர்க்கார் வரலாறை  அவரது இந்து மகாசபை வெளியிட்ட இந்த நூலில்
(பக். 439-61.) இதுபற்றி ஏராளமான குறிப்புகள் உள்ளது.

தேசப்பற்று குறித்து வகுப்பெடுக்கும் சங்கிகள் இந்த நூலைப் படிக்க வேண்டும். ஜெய்ஹிந்த் என்ற குரலுக்கு எதிராக மட்டுமல்லாமல் ஜன கண மன பாடலையும் கூட இவர்கள் பாடுவதில்லை. தேசியக்கொடியை ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் ஏற்றுவதில்லை. இந்தியா என்றும் சொல்வதில்லை.

இந்து முஸ்லிம் மோதலை மையப்படுத்தி எழுதிய ஆனந்தமடம் நாவலில் வரும் வந்தே மாதரம் பாடவே வலியுறுத்துவார்கள். இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்றே சொல்வார்கள். இதற்கெல்லாம் கருத்தியல் ஆதாரமான சவர்க்காரை வணங்க மறக்க மாட்டார்கள்.

சூர்யா சேவியர்
 

;