india

img

இந்தியை மட்டும் முதன்மை படுத்தும் மோடி அரசை இடித்துரைக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! -சிபிஎம் வரவேற்பு

இந்தியை மட்டும் முதன்மை படுத்தும் மோடி அரசை இடித்துரைக்கும் வகையில் சென்னை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தெரிவித்துள்ளது. தீர்ப்பை வரவேற்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதும் கடிதங்களுக்கு
ஒன்றிய அரசின் சார்பில் இந்தி மொழியில் மட்டுமே பதில் அனுப்பப்பட்டு வந்தது.
ஒன்றிய அரசின் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையினை எதிர்த்தும்,
அலுவல் மொழிச் சட்டம் 1963 பிரிவு (3)ற்கு முரணாக ஒன்றிய அரசு நடந்து
கொள்வதை கைவிட வலியுறுத்தியும், மேலும் இச்சட்டத்தின் பிரிவு 226ன் படி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவரவர்களின்
தாய்மொழியிலேயே பதிலளிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சென்னை
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, ஒன்றிய அரசு
அலுவல் மொழிச் சட்டம் 1963-ஐ முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும்,
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு இனி அவர்கள் அனுப்புகிற
கடிதங்களின் மொழியிலேயே பதில் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்
உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொடர்ச்சியான இந்தி மொழி திணிப்பு
நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், நாடாளுமன்ற
உறுப்பினர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் வகையிலும்
அளிக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
இந்தியை மட்டும் முதன்மை படுத்தும் மோடி அரசின் போக்கை இடித்துரைக்கும்
விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
மொழித் திணிப்புக்கு எதிராகவும், அனைத்து அட்டவணை மொழிகளுக்கும் சம
உரிமைகளை வலியுறுத்தியும் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தி வரும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சிக்கு கிடைத்திருக்கும்

மற்றுமொரு வெற்றியாகவே இத்தீர்ப்பும் அமைந்திருக்கிறது என்பதையும்
சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேலும் தாய் மொழியின் உரிமைக்காகவும், ஆட்சி மொழி, வழக்காடு மொழி
உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் தமிழ் மொழியின் உரிமை பாதுகாக்கப்பட
வேண்டும் என அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை
முன்னெடுத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மொழி உரிமைகளுக்கான
போராட்டங்களை எதிர்காலத்திலும் வலுவாக தொடரும் எனவும் தெரிவிக்க
விரும்புகிறோம்.
சரியான நேரத்தில் வழக்கு தொடுத்த கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
தோழர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்
கொள்கிறோம்.

;