india

img

கல்வி, சுகாதாரத்திற்கான செலவை அதிகரிக்க வேண்டும்.... ஒன்றிய - மாநில அரசுகளுக்கு ரகுராம் ராஜன் அறிவுறுத்தல்....

புதுதில்லி:
“கல்வி, சுகாதாரத்திற்கான முதலீட்டை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அதிகப்படுத்த வேண்டும்” என்று பொருளாதார வல்லுநரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.‘தி குவிண்ட்’ (The Quint) செய்திக் குழுமத்தின் இணை நிறுவனர் ராகவ் பாஹல் ஏற்பாடு செய்திருந்த நேர்காணலில் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“கல்வி நிலையங்களைத் திறப்பதற்கு தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால், வருங்காலங்களில் மோசமான பின்விளைவுகளை நாடு சந்திக்கும். உத்தரப் பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களை மீண்டும் கல்வி நிலையங்களுக்கு கொண்டுவருவது மட்டும் போதாது. முழுமையான கல்வி நீரோட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். பள்ளிகள் தங்கள் செயல்பாடுகளை அதிகப்படுத்தி, இழந்த கல்வி கற்பித்தல் நாட்களை ஈடு செய்ய வேண்டும்.

டிஜிட்டல் இடைவெளி அதிகரிப்பதால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ள மாணவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். அத்தகைய  மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் வளங்களை அளிக்க வேண்டும். ஏற்கெனவே, இவர்கள் தரம் குறைந்த கல்வி நிறுவனங்களால் மோசமான கல்வியைப் பெற்றுள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களில், இவர்கள் பல வருடங்கள் (3 அல்லது 4 ஆண்டுகள்) பின்னோக்கி தள்ளிவிடப்பட்டுள்ளனர். இதை, நாம் முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும்.இழந்த கல்வியை மீட்கவும், இயல்பு நிலைக்கு மீண்டும் செல்லவும் விரைவாக செயல்படுவது மிகவும் அவசியம். வழக்கமான பணியாக இதை செய்யமுடியாது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கல்வியில் முதலீடு செய்வது, நாட்டின் ஒளிமிக்க எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு ஒப்பாகும். செலவழிக்கும் இடத்தில் செலவு செய்ய வேண்டும். ஆனால், கல்வி, சுகாதாரத்துறை போன்ற துறைகளில் நமது முயற்சிகள் முட்டாள்தனமானவையாக உள்ளன.கொரோனா பெருந்தொற்று நடத்தை முறைகள்  பின்பற்றப்பட்டு, பெருவாரியான மக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொண்டால், மூன்றாவது அலையைத் தடுக்க முடியும். ஆனால், போதிய தடுப்பூசி டோஸ்கள் கைவசம் இல்லை. இதை மிகப்பெரிய பிரச்சனையாக கருதுகிறேன்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

;