india

img

கொரோனா 2-ஆவது அலையில் டிராக்டர் விற்பனையும் சரிந்தது... 70 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்த ஆட்டோமொபைல் துறை....

புதுதில்லி:
கொரோனா தொற்றின் 2-ஆவதுஅலை, நாட்டின் சுகாதாரத்துறைக்கு மட்டுமன்றி, தொழிற்துறைக்கும் மிகுந்த சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மற்றொரு புறத்தில் ஊரடங்கால் தொழில் - வர்த்தகத் துறையிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகின. நாட்டின் மிகப்பெரிய வாகனஉற்பத்தி நிறுவனங்களான மாருதிசுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா,டாடா மோட்டார்ஸ், ரெனால்ட், நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு,எம்ஜி மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.நாடு முழுவதும் 26 ஆயிரத்து 500 ஆட்டோமொபைல் ஷோரூம் விற்பனை நிலையங்கள் உள்ள நிலையில், இவற்றில் சுமார் 20 ஆயிரம் விற்பனை நிலையங்கள் முழு பொதுமுடக்கம் காரணமாக பகுதி நேரமாகவோ, முழுநேரமாக மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட் டன.இந்நிலையில்தான், நிதி நெருக்கடி, ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் சென்ற மேமாதத்தில் மட்டும் இந்தியாவில் வாகன விற்பனை 55 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.இதையே 2019 மே மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 70 சதவிகித அளவிற்கு வாகன விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.2021 ஏப்ரலில் நாடு முழுவதும் 11 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், மே மாதத்தில்  அந்த எண்ணிக்கை 5 லட்சத்து 35 ஆயிரத்து 855 வாகனங்களாக சரிந்துள்ளன.

மே மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை அளவு 53 சதவிகிதம் சரிந்து 4 லட்சத்து 10 ஆயிரத்து 757 வாகனங்களும், கார் விற்பனை 59 சதவிகிதம் சரிந்து 85 ஆயிரத்து 733 வாகனங்களும் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.வர்த்தக வாகனங்கள் பிரிவில் 66 சதவிகிதம் சரிவு ஏற்பட்டு, 17 ஆயிரத்து 534 வாகனங்களும், 3 சக்கர வாகனங்கள் பிரிவில் 76 சதவிகித சரிவுடன் 5 ஆயிரத்து 215 வாகனங்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன.இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றின் முதல் அலையில் கார், இருசக்கர வாகன விற்பனை குறைந்தாலும், விவசாயத் துறையில் பயன்படுத்தும் டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் விற்பனை குறையவில்லை. ஆனால், தற்போதைய கொரோனா தொற்றின் 2-ஆவது அலை இந்தியக் கிராமங்களையும் பாதிக்கத் துவங்கி யுள்ளதால், அது டிராக்டர் விற்பனையிலும் சரிவை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, டிராக்டர் விற்பனை 57 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

;