india

img

ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையே பேச்சு சுதந்திரம்தான்... திஷா ரவி-க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிரேட்டா தன்பெர்க்....

புதுதில்லி:
ஜனவரி 26 - தில்லி விவசாயிகள் போராட்டத்தின் போது, வன்முறையைத் தூண்டிவிட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவி (22) கைது செய்யப்பட்டுஉள்ள நிலையில், அவருக்கு, சக சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த 22 வயது சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை, உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்துறையின் சைபர் பிரிவு கடந்த வாரம் கைது செய்தது.ஜனவரி 26 அன்று தில்லியில் விவசாயிகள் அறிவித்த போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர்- போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்பதை பற்றியும் விளக்கும் ‘டூல் கிட்’ ஒன்றை உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்தார்- என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், திஷா ரவி கைது செய்யப்பட்டார். கிரேட்டா தன்பெர்க்கின் “ப்ரைடே’ஸ் பார் பியூச்சர்” (Fridays For Future) என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் என்ற வகையில், திஷா ரவியின் கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் என பல்வேறு தரப்பினரும், திஷா ரவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், “ப்ரைடே’ஸ் பார்பியூச்சர்” அமைப்பை நிறுவியவரும், உலகின் இளம் சூழலியல் ஆர்வலருமான கிரேட்டா தன்பெர்க்கும், திஷா ரவிக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். ‘’பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவைஅடிப்படையான மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும்” மத்திய பாஜக அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.இதனிடையே, பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் குழுக்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆகியோர் அடங்கிய குழு, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.அதில், திஷா ரவியை அத்துமீறி கைது செய்தது தொடர்பாகவும், அவரை அழைத்து சென்ற விதத்திற்காகவும் தில்லி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன் உள்ளூர் நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல் தில்லி காவல்துறை அத்துமீறி செயல்பட்டது என்றும் அந்த மனுவில் கூறியுள்ள னர்.

;