புதுதில்லி:
200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தென்கொரியா இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பல மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவஉபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது. மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கையோ மிகவும் மெத்தனமாக இருக்கிறது என்றும் சாடியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் நட்பு நாடுகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத்தேவையான மருத்துவ உபகரணங்களை சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்புகின்றன. இதில் தென் கொரியாவில் இருந்து இந்தியாவிற்கு புதனன்று அதிகாலை வந்த விமானத்தில் 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தென் கொரியாவிடம் இருந்து 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன.