india

img

பிரதமரின் கோரிக்கையை நிராகரித்த சாதுக்கள்... கும்பமேளா வழக்கம் போல் தொடரும் என அறிவிப்பு....

உத்தரகண்ட்:
ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவை முன்கூட்டியே முடித்துக் கொள்ள முடியாது என சாதுக்கள்தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 14 இல் 43 லட்சம் பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர். இதனால், பல சாதுக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே, பிரதமர் மோடி கும்பமேளாவை முன்கூட்டியே முடித்துக் கொள்ளும்படி சாதுக்களிடம் கோரியிருந்தார். இதையடுத்து, ஜூனா அகாடாவின் மஹந்த் ஆவ்தேஷாணந்த், ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் கும்பமேளா முடித்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார். இந்நிலையில், பிரதமரின் கோரிக்கைக்கு பிறகும் கும்பமேளா மே 27 ஆம் தேதி வரை தொடரும் என ஜூனா அகாடாவின் சர்வதேச காப்பாளரான மஹந்த ஹரி கிரி அறிவித்துள்ளார்.இதுகுறித்து பஞ்சாயத்து நிர்மோஹி அகாடாவின் தலைவரான மஹந்த் ராஜேந்திர தாஸ் கூறும்போது, ‘கொரோனா தடுப்பு மீதான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் கும்பமேளாவில் கடைபிடிக்கப்படும். எனினும், வழக்கத்திற்கு மாறாக கும்பமேளாவின் முன்கூட்டியே முடிக்கக் கோரும் சில சாதுக்களின் அறிவிப்பு இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கும்பமேளாவில் ஞாயிறன்று 634 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து கும்பமேளாவில் மொத்தம் 81 சாதுக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஹரித்துவாரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

;