india

img

பெட்ரோல், டீசல்,கேஸ் விலை ஏற்றம்.... நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மோடி அரசு அனுமதி மறுப்பு...

புதுதில்லி:
பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வதுஅமர்வு திங்களன்று காலை தொடங்கியதும் புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பின்னர் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் அவர் பேசுகையில்,‘எரிபொருட்கள் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விதி எண் 267 ஐ பயன்படுத்தி அவை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, பெட்ரோல் -டீசல் எரிவாயு விலையேற்றம் குறித்து விவாதம் நடத்தவேண்டும்.எரிபொருள் விலை யேற்றத்திற்கு என்ன காரணத்தை அரசு கூறுகிறது என்று பார்ப்போம்’ என்றார்.ஆனால் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அனுமதி தரவில்லை.இதையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. குழப்பத்திற்கு இடையே கேள்வி நேரத்தை நடத்த முயன்ற அவைத் தலைவரின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து மாநிலங்களவையை 11 மணி வரை ஒத்திவைக்க நேரிட்டது. பின்னர் அவை கூடிய போதும் எரிபொருள் விலையேற்றம் குறித்து விவாதம் அனுமதி தரக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி இருந்ததால் அவையில் குழப்பம் நீடித்தது. இதனையடுத்து அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

ரூ. 21 லட்சம் கோடி எங்கே போனது?

இதையடுத்து மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ்விலை உயர்வு குறித்து மக்களின் கோபத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்த முயன்றோம். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். ஆனால், அதற்கு மத்திய அரசு சம்மதிக்கவில்லை. அதைக் கேட்கத் தயாராகவும் இல்லை.ஆனால், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எங்கள் கோரிக்கையை எழுப்புவோம். சாமானிய மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் 
விலை உயர்வு குறித்து பேசமுயன்றால், அதற்கு நேரம் ஒதுக்கப்பட வில்லை.சாமானிய மக்களின் பிரச்சனை களைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச நேரம் ஒதுக்க வேண்டும். மற்றகட்சிகளும் காங்கிரஸ் கட்சியுடன்தான் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் எங்களுடன் இணக்கமாக இருக்கிறார்கள். சாமானிய மக்களின் கவலைகளை நாடாளுமன்றத் தில் தொடர்ந்து நாங்கள் எழுப்புவோம்.

மோடி அரசு கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் ரூ.21 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. அந்தப் பணம் எங்கே சென்றது, அந்தப் பணத்தை யாரிடம்கொடுத்தார்கள்?ஒருபுறம் மத்திய அரசு கோடீஸ்வரர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் வரியைக் குறைக்கிறது. மறுபுறம், பெண்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சாமானிய மக்கள் ஆகியோர் மீது கூடுதல் சுமையை ஏற்றுகிறது. அவர்களால் அதைத்தாங்க முடியவில்லை. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி ஒவ்வொருபொருளின் விலையும் அதிகரித்து விட்டது.அரசின் கஜானாவை நிரப்பும் பணியை அரசு ஒருபுறம் செய்கிறது. ஆனால், விலைவாசி உயர்வு மக்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அரசு பார்க்க மறுக்கிறது. பெட்ரோல்,டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள வரி, வளர்ந்த நாடுகளில் கூட இல்லை. இந்த வரியைக் குறைக்கக் கோரி சோனியா காந்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியும் அரசு வரியைக் குறைக்க மறுக்கிறது.இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

;