புதுதில்லி:
காவல் நிலையத்தில் பதியப்படும் அனைத்து வழக்குகளிலும் கைது நடவடிக்கை கட்டாயமில்லை. வழக்கிற்கு ஏற்றபடி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்வது ஒன்றிய, மாநில காவல்துறையின் சட்ட ரீதியான நடவடிக்கையாகும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘‘சாதாரணமாக விசாரித்து செல்லக் கூடிய விவகாரங்களில் கூட காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இது, தேவையற்ற ஒன்று என்பதால் இதுகுறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் வழங்கப்பட்ட உத்தரவில், ‘‘சாதாரணமாக, சம்பிரதாயமான முறையில் காவல் துறை செய்யும் கைது நடவடிக்கை, அது சம்பந்தப்பட்ட மனிதர்களின் கவுரவம், தன்மானத்துக்கு மிகப்பெரிய இழுக்காக அமைந்து விடும். கைது செய்வதற்கு சட்டம் அனுமதித்தாலும், அந்த அதிகாரத்தை எந்த காரணம் கொண்டும் தன்னிச்சையாக பயன்படுத்தக் கூடாது. இருப்பினும், கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்பித்துச்செல்ல வாய்ப்பு இருக்கும் போது கைது நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ளலாம். அதனால், இதுகுறித்த உத்தரவை ஒன்றிய, மாநில அரசுகளும், காவல்துறையினரும் கருத்தில் கொண்டு வரும் காலங்களில், வழக்கிற்கு ஏற்றப்படி செயல்பட வேண்டும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.