india

img

வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய பாஜக அரசுக்கு எதிர்ப்பு.... ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்  வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று  நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவரின் உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்  ஜனவரி 29 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 15 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 31 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்உரையாற்றுகிறார். 

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தில்லியில் நடந்த வன்முறை தொடர்பாக சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். கலவரத்தில் மத்திய அரசின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  குடியரசுத்தலைவரின் உரையை புறக்கணிக்க  முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின்  மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் வியாழக்கிழ மையன்று தெரிவி்த்தார்.இதுகுறித்து  குலாம்நபி ஆசாத்செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையை புறக்கணிக்க 16எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகள் இன்றிவேளாண் சட்டங்கள் நாடாளு மன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று  தெரிவித்தார்.

வன்முறையில் மத்திய அரசின் பங்கு குறித்து விசாரித்திடுக!

இதுகுறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜக அரசு தன்னிச்சையாக கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள் ஆகியோரின் வாழ்வாதாரம், 60 சதவீதம் மக்கள் சார்ந்திருக்கும் வேளாண்துறையின் எதிர்காலமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

தில்லியின் எல்லைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிர், மழையைப் பொருட்படுத்தா மல், உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடி வருகிறார்கள். 155விவசாயிகள் இதுவரை போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் மத்திய அரசு தன் நிலையிலிருந்து மாறாமல், தண்ணீரைப்பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் பதில் அளிக்கிறது.

விவசாயிகளின் போராட்டம் அமைதியாகவே நடந்திருக்கிறது. துரதிர்ஷ்டமாக கடந்த 26 ஆம் தேதி சில வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறையில் தில்லி காவல்துறையினர் அடைந்த காயத்துக்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த கலவரம் தொடர்பாக சார்பற்ற விசாரணை நடத்தி, இதில் மத்திய அரசின் பங்கு என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.வேளாண் சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதல், அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவத்தை மீறுவதாகும். இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், இந்தியாவின் உணவுப்பாதுகாப்பு, குறைந்தபட்ச ஆதாரவிலை, பொதுவிநியோக முறையை சிதைத்துவிடும்.

மாநிலங்களுடனும், விவசாயிகள் சங்கங்களுடனும், தேசிய கருத்தொற்றுமை இல்லாமல், எந்தவிதமான ஆலோசனை, விவாதங்கள்இல்லாமல், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதங்கள் இல்லாமல், எதிர்க்கட்சிகளை அடக்கி  வைத்து இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இது அப்பட்டமான நாடாளுமன்ற விதிமுறை, செயல், மரபு மீறல்.இந்த சட்டத்தின் அரசியலமைப்புஅந்தஸ்தும்,  நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

அகங்காரம், பிடிவாதத்துடன் பாஜக அரசு-பிரதமர் 
பாஜக அரசும், பிரதமரும் அகங்காரத்துடனும், பிடிவாதத்துடனும், ஜனநாயக விரோதத்துடன் நடக்கிறார்கள். மத்திய அரசு உணர்வற்று இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் குடியரசுத் தலைவர் உரையை நாளை (வெள்ளி) 16 எதிர்க்கட்சிகளும் சேர்ந்து புறக்கணிக்கிறோம்இவ்வாறு  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;