india

img

ராம்தேவ் மருந்தை எதன் அடிப்படையில் அங்கீகரித்தீர்கள்...? மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு கேள்வி....

புதுதில்லி:
சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் (Coronil) ‘கொரோனா சிகிச்சைக்கு உதவும் ஒரு மருந்து’ என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அண்மையில் அங்கீகாரம் அளித்தது.

‘கொரோனில் கிட்’ மருந்திற்கு உலக சுகாதார அமைப்பின் (W.H.O.) தரச் சான்றிதழ் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது என்று பதஞ்சலி நிறுவனமும் அறிக்கை வெளியிட்டது.அதுமட்டுமன்றி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில் சாமியார் ராம்தேவ் பேசுகையில், நவீன மருத்துவ முறையை “மருத்துவ பயங்கரவாதம்” என்று கடுமையாகச் சாடினார். ஆயுர்வேத கலவையான கொரோனிலை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். 

இந்த செய்திகள் வெளியான பின்னணியில், ராம்தேவின் கொரோனில் மருந்துக்கு, தாங்கள் எந்த சான்றிதழும் அளிக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. “எந்த பாரம்பரிய மருந்தின் செயல்திறன் குறித்தும் தாங்கள் ஆய்வு செய்யவோ சான்றிதழ் வழங்கவோ இல்லை” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிரிவு டுவிட்டரில் விளக்கம் அளித்தது.இது மோடி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியது உலக சுகாதார நிறுவனமே அங்கீகரிக்காத கொரோனிலுக்கு, நரேந்திர மோடி அரசு மட்டும் எதன் அடிப்படையில் அனுமதி அளித்தது? என்று கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்என்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசோ வாய் திறக்கவில்லை. கொரோனிலுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளிக்கவில்லை என்பதை மட்டும் ஹர்ஷ்வர்த்தன் உறுதிப்படுத்தினார். இந்திய அரசு எவ்வாறு அனுமதி வழங்கியது? என்பதற்கு பதிலளிக்கவில்லை.

இது இந்திய மருத்துவ கூட்டமைப்பினரை (Inidan Medical Association - IMA) கொதிப்படைய வைத்துள்ளது. மத்திய அமைச்சருக்கு  பகிரங்கமாகவே தங்களின் கண்டனத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர்.“பதஞ்சலி தயாரித்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? அப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், எத்தனை பேருக்கு ஆய்வு செய்யப்பட்டது? ஆய்வின் முடிவு என்ன? ஆய்வு குறித்து எந்த நிறுவனம் இவர்களுக்கு சான்று வழங்கியது? அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு பொருளை, மருந்து என்று கூறி போலியாக உலவ விடும் நபர்களுக்கு ஆதரவாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரே செயல்பட்டது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, பதஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்ட அமைச்சர்கள், தார்மீக அடிப்படையில் தாமாகவே முன்வந்து கொரோனில் மருந்தை பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.

பதஞ்சலியின் ‘கொரோனில்’ மருந்து கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றும் என்றால், எதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பு மருந்துக்கு செலவு செய்தீர்கள்? என்றும் மோடி அரசை மருத்துவ கூட்டமைப்பு கேட்டுள்ளது.இப்பிரச்சனையில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தாங்கள் கடிதம் எழுதப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

;