india

img

ஐ.ஐ.டி முனைவர் பட்ட படிப்பில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் அநீதி.... சு.வெங்கடேசன் எம்.பி., யின் கேள்வியால் அம்பலமானது....

புதுதில்லி:
ஐ.ஐ.டி முனைவர் பட்ட அனுமதிகளில் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி பிரிவினர்க்கான இட ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்வியால் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்த அதிர்ச்சியான பதில் (கேள்வி எண்: 1058) மூலம் இவ்விஷயம் அம்பலமானது. 

முனைவர் பட்டக் கல்வியில் அனுமதிக்கப் பட்டுள்ள பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், இதர பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை, அப்பிரிவுகளுக்குரிய இட ஒதுக்கீடுசதவீதங்களை விட மிகக் குறைவாக உள்ளது. இந்தியாவின் 23 ஐ.ஐ.டி களில் மொத்தம் 7186 மாணவர்கள் 2020 ஆம் ஆண்டில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் ஓ.பி.சி மாணவர்கள் 1635 பேர், 707 பேர் பட்டியல் சாதியினர், 321 பேர் பழங்குடியினர் என அப் பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.பட்டியல் சாதியினர் 10 சதவீதத்திற்கு கீழ்பட்டியல் சாதி மாணவர்களின் சதவீதம் குறைந்தபட்சம் 15 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் முனைவர் பட்ட அனுமதிகளில் பட்டியல் சாதி மாணவர்களின் சதவீதம் 9.83 மட்டுமே. 15 சதவீதம் எனில் 1077 பட்டியல் சாதி மாணவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 370 இடங்கள் குறைவாக இருக்கின்றன. 23 ஐ.ஐ.டி களில் கோவா, தன்பாத், ரூர்கி ஆகியமூன்றைத் தவிர மற்ற 20 ஐ.ஐ.டி களிலும் அனுமதிக்கப்பட்ட இப்பிரிவு மாணவர் எண்ணிக்கை, உரிய இட ஒதுக்கீடு சதவீதத்தை விட குறைவாக இருக்கிறது. சென்னை ஐ.ஐ.டியிலும் 9.41 சதவீதம் மட்டுமே பட்டியல் சாதி மாணவருக்கு இடம் கிடைத்துள்ளது. 

பழங்குடியினர் 5 சதவீதத்திற்கும் கீழே 
பழங்குடி மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் 7.5 சதவீத இடங்களைப் பெற வேண்டும். ஆனால் 2020 ல் 4.46 சதவீத பழங்குடி மாணவர்களே இடம் பெற்றுள்ளனர். ஐ.ஐ.டி மும்பை மற்றும் ரூர்கி தவிர மற்ற 21 ஐ.ஐ.டி களிலும் உரிய சதவீதம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதில் மேலும் அதிர்ச்சி அளிப்பது என்னவெனில் காந்தி நகர்  ஐ.ஐ.டியில் 124 பேர் முனைவர் பட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலைமையில் ஒரு பழங்குடி மாணவர் கூட அதில் இல்லை. ரோபார் ஐ.ஐ.டியில் 186 மொத்த மாணவர் அனுமதியில் ஒரு பழங்குடி மாணவர் கூட இல்லை. திருப்பதி ஐ.ஐ.டி யில் 148 பேரில் ஒரு பழங்குடியினர் கூட இல்லை. பாலக்காடு ஐ.ஐ.டியிலும் 146 பேரில் ஒரு பழங்குடியினர் கூட இல்லை.  பழங்குடியினருக்கான 15 சதவீதம் நிரப்பப்பட்டிருந்தால் குறைந்த பட்சம் 538 பேருக்கு கிடைத்திருக்கும். ஆனால் 217 பேர் குறைவாக உள்ளனர். 

ஓ.பி.சி அனுமதியிலும் பள்ளம்
இதர பிற்பட்டோர் 27 சதவீதம் என்ற அளவில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தன்பாத், தார்வார், பாலக்காடு, திருப்பதி, வாரணாசி, இந்தூர், பாட்னா, ஹைதராபாத், புவனேஸ்வர் ஆகிய ஐ.ஐ.டிக்கள் தவிர மீதமுள்ள 14 ஐ.ஐ.டிகளில் உரிய சதவீதத்தில் இதர பிற்பட்ட மாணவர்கள் அனுமதி பெறவில்லை. 1940 மாணவர்கள் இடம் பெற வேண்டிய நிலையில் 315 பேர் குறைவாக உள்ளனர். இடஒதுக்கீடு அமலாவதை உறுதி செய்க:சு.வெங்கடேசன் இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கருத்து தெரிவிக்கையில்,  “அமைச்சரின் பதில் மிக அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் அனுமதி) சட்டம் வரையறுத்துள்ள இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது ஒரு ஆண்டு கணக்குதான். ஒரு ஆண்டில் மட்டும் 902 இடங்களை ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இழந்திருக்கிறார்கள்.

இழந்ததே மொத்தஇடங்களில் 13 சதவீதத்தை நெருங்குகிறது. ஓராண்டில் இவ்வளவை இழந்தால் கடந்த காலங்களில் எவ்வளவு பறிபோயிருக்கும்? எதிர்காலத்தில் எவ்வளவு பறி போகும்? இந்த லட்சணத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ் தலைமையிலான நிபுணர் குழு மாணவர் அனுமதிகளில் இட ஒதுக்கீடு முறையாககடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டிருப்பதுதான் வேதனையானது. முனைவர் பட்டஅனுமதிகளுக்கான முன் பயிற்சிக்கு ஆய்வு உதவியாளர் என்ற கல்விப் பிரிவை அறிமுகம் செய்யலாம் என்றும், அதைப் படிப்பவர்களுக்கு முனைவர் பட்டக் கல்விக்கான அனுமதி தருவதற்கு எந்த உத்தரவாதமும் இருக்காது என்றும் பரிந்துரைத்திருந்தது.  அந்த அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவிக்க வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமலாவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

;