india

img

தேசிய கல்விக் கொள்கை தமிழ்மொழியில் வெளியிடப்படவில்லை....

புதுதில்லி:
தேசிய கல்விக் கொள்கையை 17 மொழிகளில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்படவில்லை. தமிழ்மொழி வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கீடு, தேசிய வேலைவாய்ப்பு தேர்வுகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு என்று தொடங்கி, தற்போது தேசிய கல்விக் கொள்கையை தமிழ்மொழியில் வெளியிடாதது என மத்திய பாஜக அரசு, தமிழ் மொழிக்கு விரோதமானப் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக அரசியல் கட்சியினர்,தமிழறிஞர்கள், மக்கள் கண்டித்துள்ளனர்.

1986, 1992-ம் ஆண்டுகளில் கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அதன்பின்  2016-ல் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு கல்விக்கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. இதற்கிடையே 2019-ல் கஸ்தூரி ரங்கன்கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதியகல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவுகுறைக்கப்படும். 6 ஆம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன. ஏழை மாணவர்களை கல்வி பெறுவதிலிருந்து விரட்டுவதாக இக்கல்விக்கொள்கை உள்ளது என்று கல்வியாளர்களும் மாணவர் அமைப்புகளும் குற்றம்சாட்டினர்.ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.

இதற்கான பிராந்திய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது.கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி,காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம்,பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி,சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. எனினும் இதில் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை. மொழிபெயர்ப்பை  https://www.education.gov.in/en/nep-languages-2020 என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

;