india

img

மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து, ஜனநாயகத்தின் அடிப்படையை தகர்க்கிறது மோடி அரசு... பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் குற்றச்சாட்டு...

சண்டிகர்:
மாநில அரசுகளுக்கான உரிமைகளை மத்திய அரசு திட்டமிட்டுப் பறித்து வருகிறது. இந்தப் போக்கு ஜனநாயகத்தின் அடிப்படையை தகர்ப்பதாக உள்ளது என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாகவும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருக்கிறது என வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் தொடர்பான கண்காட்சியை மாநில முதல்வர் அமரிந்தர் சிங் துவக்கி வைத்துப் பேசுகையில், தேசிய உணவு தானியக் கிடங்குக்கு பஞ்சாப் மாநிலம் மட்டும் 40 சதவீதம் அளவில் பங்களிக்கிறது. ஆனால் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பஞ்சாப் அரசை கலந்தாலோசிக்க வில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி வேளாண் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது. உண்மையில் மத்திய அரசுக்கு விவசாயிகளின் நலன்களில் அக்கறை இருக்கும்பட்சத்தில் அது மாநில அரசையோ,மாநில விவசாயிகளையோ கலந்தாலோசித்திருக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண் துறையை சார்ந்திருக்கிறது.  மத்திய அரசு திட்டமிட்டு மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கிறது. மத்திய அரசின் இந்தப் போக்கு ஜனநாயகத்தின் அடிப்படையை தகர்ப்பதாக உள்ளது . மத்திய அரசு விவசாயிகளின் வலியை உணராமல் இருக்கிறது.  வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 144 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலையும் பஞ்சாப் மாநில அரசு வழங்குவதாகக் கூறினார்.

;