india

img

எரிவாயு மானியத்திலும் மக்களை ஏமாற்றும் மோடி அரசு... சிலிண்டருக்கு வெறும் 25 ரூபாய்தான்.. 2020 மே-யில் 1 ரூபாய் கூட வழங்கவில்லை...

புதுதில்லி:
நீண்டகாலமாக மக்களின் பயன்பாட்டில் இருக்கும் முக்கிய எரிபொருள் மண்ணெண்ணெய் (Kerosene) ஆகும். ஆனால், மண்ணெண்ணெய்க்குப் பதில் எரிவாயு (LPG) பயன்பாட்டை மத்திய அரசாங்கம் ஊக்கப்படுத்தியது. இதனால் மக்களும் பெருமளவில் எரிவாயு பயன்பாட்டுக்கு மாறினர். இன்று நாடு முழுவதும் 28 கோடியே 90 லட்சம் சமையல் எரிவாயுஇணைப்புக்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு கணக்கு தெரிவிக்கிறது.

2021-22 பட்ஜெட்டில் மண்ணெண்ணெய்க்கு வழங்கிவந்த மானியத்தை முழுமையாகவே மோடி அரசு நிறுத்தி விட்டது. 2019-20 நிதியாண்டில் மண்ணெண்ணெய்க்கான மொத்த மானியச் செலவு ரூ. 4 ஆயிரத்து 58 கோடியாக இருந்தது. அது நடப்பு 2020-21 நிதியாண்டில் ரூ. 2 ஆயிரத்து 677 கோடியே 32 லட்சமாக குறைக்கப்பட்டு- 2021-22 நிதியாண்டிற்கு ஒதுக்கீடே இல்லை என்று நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. 2016-இல் துவங்கி, ஒவ்வொரு 15 வாரங்களுக்கு ஒருமுறை மானிய மண்ணெண்ணெய் விலையில் 25 காசுகள் உயர்த்தி, ரேசன் மண்ணெண்ணெய் விலையையும், வெளிச்சந்தையில் விற்கப்படும் மண்ணெண்ணெய் விலையையும் மோடி அரசு ஒன்றாக்கி விட்டது. 

இதுதொடர்பான விவாதங்கள் எழுந்தபோது, நாட்டில் மானியவிலை எரிவாயு இணைப்புக்களின் எண்ணிக்கையை சுமார் 29 கோடியாக அதிகரித்து இருக்கிறோம் என்பது மோடி அரசு கூறும் முக்கியக் காரணமாகும்.ஆனால், எரிவாயு இணைப்புக்கான மானியத்தையும்  மிகப்பெரிய அளவிற்கு மோடி அரசு வெட்டிச் சுருக்கி விட்டதும், 2019 டிசம்பரில் சிலிண்டருக்கு 174 ரூபாய் 72 காசுகள் மானியம் அளித்து வந்த மோடி அரசு, கடைசியாக 2021 ஜனவரியில் வெறும் 65 ரூபாய்தான் மானியமாக வழங்கியிருக்கிறது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அதுமட்டுமல்ல, கடந்த 2020 மே மாதம் மானியமே வழங்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அந்த மாதத்தில் சிலிண்டரின் விலை ரூ. 569 ஆக இருந்தது. இதற்கு மானியமே வழங்கப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் சிலிண்டரின் விலை ரூ. 606 முதல் ரூ. 881 வரை வெவ்வேறு விலைகளில் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக வழங்கப்பட்ட மானியத் தொகை வெறும் 25ரூபாய் 45 காசுகள்தான். 2020 டிசம்பரில் சிலிண்டர்விலை ரூ. 710 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதற்கான மானியம் வெறும் 24 ரூபாய் 95 காசுகள்தான்.

கடந்த மாதம்- அதாவது 2021 ஜனவரியில் மானியமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை 65 ரூபாய் 14 காசுகள் மட்டும்தான். அதாவது 200 ரூபாய்க்கும் அதிகமாக வழங்கப்பட்ட மானியத் தொகையை இன்று 25 ரூபாய், 50 ரூபாய் என்று மிகப்பெரிய அளவிற்கு குறைத்துள்ளது. பட்ஜெட் நிதி ஒதுக்கீடும் இந்த உண்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 2019-20இல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.35 ஆயிரத்து 605 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனை முடிவடைய உள்ள 2020-21 நிதியாண்டிற்கு ரூ. 25 ஆயிரத்து 520 கோடியே 79 லட்சமாக குறைத்த பாஜக அரசு, எதிர்வரும் 2021-22 நிதியாண்டிற்கு வெறும் ரூ. 12 ஆயிரத்து 480 கோடியாக வெட்டிச்சுருக்கியுள்ளது.இந்த உண்மையை மறைத்துத்தான், 29 கோடி எரிவாயு இணைப்புக்கள் கொடுத்துள்ளோம்; பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக மட்டும் சுமார் 7 கோடி இணைப்புக்கள் வழங்கியிருக்கிறோம் என்று வெளியே பெருமை பீற்றி வருகிறது.

இதில் இன்னொரு துயரத்தையும் மக்கள் மீது மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. அது என்னவெனில், எரிவாயுவுக்கான மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவதாகும்.எரிவாயு மானியத் தொகையைப் பெறுவதற்காகவே பலரும் வங்கிக் கணக்கு ஆரம்பித்தனர். மாதம் 500 ரூபாய்கூட சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க முடியாதவர்கள், எரிவாயு மானியத்திற்காக கணக்கு ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். மாதந்தோறும் வரும் மானியத் தொகையானது, இவர்களது வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புக்கு ஒரு உத்தரவாதத்தை அளித்து வந்தது. ஆனால், தற்போது 25 ரூபாய், 30 ரூபாய் என்ற அளவில் மட்டுமே வரும் மானியத்தால், பலரின் வங்கிக் கணக்குகள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க முடியாமலும், வந்துவிழும் 50 ரூபாய் மானியத்தை அபராதமாக பறிகொடுத்துக் கொண்டிருப்பதும் முக்கியமான அவலமாக மாறியிருக்கிறது. அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை அரசாங்கமே மானியமாக பறித்துக் கொள்கிறது. ஜீரோ பேலன்சில் ஆரம்பிக்கப்பட்ட ஜன்தன் கணக்குகள் மட்டுமே இதில் தப்பிக்கின்றன.இந்நிலையில்தான் பட்ஜெட்டில், பெட்ரோல் - டீசல் மீதான வரிகளை உயர்த்திய மோடி அரசு, எரிவாயு சிலிண்டர் விலையிலும் 25 
ரூபாயை உயர்த்தி, மேலும் மேலும் கொள்ளையை தீவிரப்படுத்தியுள்ளது.

;