india

img

மாணவர்களுக்கு ‘காமதேனு பசு அறிவியல்’ தேர்வு..... மூடநம்பிக்கையை பரப்புவதாக யுஜிசி மீது குற்றச்சாட்டு....

புதுதில்லி:
மாணவர்களை ‘காமதேனு பசு அறிவியல்’ தேர்வு எழுதச் செய்ய ஊக்குவிக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது மூட நம்பிக்கையை பரப்பும் நடவடிக்கை என கேரள அறிவியல் இயக்கம் (கேரள சாஸ்திரிய சாகித்ய பரிசத் - கேஎஸ்எஸ்வி) தெரிவித்துஉள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான சுற்றறிக்கையில், மாட்டு அறிவியலில் ஒரு நபர் எவ்வளவு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க ‘காமதேனு கோ விஞ்ஞான் பிரச்சார் தேர்வு’ எழுதுமாறு யுஜிசி, மாணவர்களைக் கேட்டுக் கொண்டுஉள்ளது. யுஜிசி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் கையெழுத்திட்ட சுற்றறிக்கையை இணைப்பு கல்லூரிகளுக்கு தெரிவிக்குமாறு துணைவேந்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது.மூடநம்பிக்கையை பரப்புவதை நோக்கமாகக் கொண்டது காமதேனு தேர்வு என்பதால் யுஜிசி உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று சாஸ்திர சாகித்ய பரிஷத் கோரியுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) பிப்ரவரி 15 ஆம் தேதி துணைவேந்தர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அரசு நிறுவனமான ராஷ்டிரிய காமதேனு ஆணையம் பிப்ரவரி 25 ஆம் தேதி ஆன்லைன் தேர்வை நடத்துகிறது. இதற்காக மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆய்வுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எந்த ஆதாரமும், விவாதமும், விஞ்ஞான அடிப்படையும் இல்லாத இந்த புத்தகங்களில் அபத்தங்கள் மற்றும் முட்டாள்தனங்களின் நீண்ட பட்டியல் உள்ளது. “நாட்டு மாடுகளின் நரம்புகள் சூரிய ஒளியை உறிஞ்சி வைட்டமின்-டி உற்பத்தி செய்கின்றன; பசுக்களின் கண்கள் நுண்ணறிவின் மையங்கள்; அவற்றின் மடிகளிலிருந்து சுரப்பது அமிர்தமாகும்; அவற்றின் வால்கள் உயர்ந்த ஆன்மீக மண்டலங்களுக்கு செல்வதற்கான ஒரு படிக்கட்டாகும்; நாட்டு மாடுகளின் பால் மனிதர்களை அணு கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது; நாட்டு மாடுகளின் இளம் மஞ்சள் பாலில் தங்கம் உள்ளது; கோமாதாவிலிருந்து கிடைக்கும் பாலும் தயிரும் மூத்திரமும் சாணியும் நெய்யும் சம அளவில் சேர்த்து தயாரிக்கும் பஞ்சகாவ்யம் ஒரு சித்த மருந்தாகும்; நில அதிர்வுகளுக்கும் பசுவதை செய்யப்படும்போது ஏற்படும் எதிர்மறை ஆற்றல் அலைகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத இணைப்பு உள்ளது” என்றெல்லாம் புத்தகங்களில் கூறப்பட்டிருப்பது பொருத்தமற்ற கட்டுக் கதைகளின் உதாரணமாகும்.

ஒரு அரசு நிறுவனம் இதுபோன்ற புத்தகங்களை வெளியிட்டுஉள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாகும். அத்தகைய ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தேர்வுகளை எழுதுமாறு மாணவர்களை வற்புறுத்த வேண்டும் என உயர்கல்வி அமைப்புக்கு தலைமை வகிக்கும் யூஜிசி கேட்டுக் கொண்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கை. அறிவியல் விழிப்புணர்வையும், கேள்வி அறிவையும் வளர்ப்பது குடிமக்களின் கடமை என்று நமது அரசியலமைப்பின் 51ஏ (எச்) பிரிவு கூறுகிறது. 

அறிவியல் விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அரசமைப்பு உள்ள ஒரு நாட்டில் மூடநம்பிக்கை பிரச்சாரத்துக்கு அரசாங்க நிறுவனங்கள் ஒத்துழைப்பது அவமானகரமானது என்று சாஸ்திர சாகித்ய பரிஷத் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியுள்ளது.மேலும், மதச்சார்பற்றதும் விஞ்ஞான அடிப்படையிலானதுமாக கருதப்படும் நாட்டின் கல்வி செயல்முறையை காவிமயமாக்குகிறது இந்த நடவடிக்கை. இது உலகின் பார்வையில் இந்திய பல்கலைக்கழகங்களையும் கல்வியையும் அவமானத்தில் ஆழ்த்த வழிவகுக்கும். அரசமைப்புக்கு எதிரான இந்த கடிதத்தை உடனடியாக திரும்ப பெறுமாறும், சம்பந்தப்பட்டவர்களிடம் தேர்வை ரத்து செய்யும்படியும் கேரள அறிவியல் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

;