india

img

தில்லியில் 2.5 சதவீதமாகக் குறைந்த தொற்று... ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு.....

புதுதில்லி:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தில்லியில் அமல்படுத்தப் பட்டு வரும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் (மே 31 ஆம் தேதி வரை) நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிறன்று அறிவி்த்தார்.

தில்லியில் தொற்று பரவல் தொடர்ந்து குறையும்பட்சத்தில் 31 ஆம் தேதிக்குப்பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஏப்ரல் 19 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 20 ஆம் தேதி 28 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்று, தில்லியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் தினசரி தொற்று 1,600ஆகக் குறைந்துள்ளது. பாசிட்டிவ் 2.5 சதவீதமாகச் சரிந்துள்ளது.இதையடுத்து, கொரோனா தொற்றைத் தொடர்ந்து குறைக்கும்வகையில் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.இதற்கு முன்பு இருந்த ஊரடங்கில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோ அதே நடைமுறை தொடரும். அத்தியாவசியப் பணிகள், அத்தியா வசியப் பணியில் உள்ள ஊழி யர்கள், மருத்துவம், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல் பங்க், ஏடிஎம் உள்ளிட்டவை தொடர்ந்து இயங்கும்.இதுகுறித்து தில்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் தொற்று 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் 1,600 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆனாலும் சராசரியாக நாள்தோறும் தில்லியில் ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு வருகின்றனர்,இன்னும் தொற்று குறைக்கப்பட வேண்டும் என்றால் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ஆதலால், ஊரடங்கு 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது
வரும் வாரத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறையும் நிலையில், 31-ம் தேதியிலிருந்து படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும். நாம் கொரோனா வைரஸை வென்றுவிட்டோம் என்றெல்லாம் சொல்லவில்லை. கட்டுப்படுத்தியிருக்கிறோம். இதேநிலையை தக்கவைக்க வேண்டும்”.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;