india

img

கணக்கிற்காகவா? கழிப்பதற்காகவா? நூறுநாள் வேலைத்திட்டத்தில் எஸ்.சி- எஸ். டி. பிரிவினருக்கு தனி கூலிக்கணக்கை கைவிடுக.... ஒன்றிய அரசிடம் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்....

புதுதில்லி:
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டமான நூறுநாள் வேலைத்திட்டத்தில் எஸ்.சி- எஸ். டி. பிரிவினருக்கு தனி கூலிக்கணக்கு ஏன்?என்று ஒன்றிய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைநாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  , சாதியரீதியான பிரிவினையை கூலிக்கணக்குகளில் கொண்டுவருவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தின் கீழ் பணி புரியும் பட்டியல் சாதி பழங்குடியினருக்கு வழங்கப்படும் கூலி கணக்கை தனியாக தொகுக்குமாறு ஒன்றிய அரசு விடுத்துள்ளஅறிவுறுத்தல், பட்டியல் சாதி, பழங்குடியினருக்கு வெறும் கணக்கிற்காகவே, வேறு எதுவும் சிறப்பு பயன்களை வழங்குவதற்காக அல்ல என்பதுசு.வெங்கடேசன் எம்.பி.,செவ்வாயன்று எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கிராமப்புற மேம்பாடு துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதிஅளித்த பதிலில் இருந்து தெரிய வருகிறது.  மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பணிபுரியும் பட்டியல் சாதிபழங்குடியினருக்கு கூலியை தனியாக வழங்குவதற்காக அரசிடம் எந்த திட்டமும் உள்ளதா, அதற்கான கணக்குகளை தனியாக பராமரிக்குமாறு அமைச்சகம் விடுத்துள்ள அறிவுறுத்தலின் பின்புல காரணம் என்ன, வேலை நாட்களை அதிகரிக்க திட்டம் உள்ளதா? பட்டியல் சாதி பழங்குடியினருக்கு கூடுதல் பயன் தரும் சிறப்பு திட்டங்கள் வகுப்பதற்கான முன்மொழிவு ஏதும் அரசிடம் உள்ளதா? என்று சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி எழுப்பியிருந்தார். 

வேலைநாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை
இதற்கு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதிஅளித்துள்ள பதிலில், “மகாத்மா காந்தி கிராமப்புறவேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ள பட்டியல் சாதி பழங்குடியினருக்கு தனி பட்ஜெட் தலைப்புகளின் கீழ் செலவினங்களை தொகுப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஆகவே தேசிய மின்னணு நிதி நிர்வாக முறைமையின் கீழ் பெறப்படும் கூலிச் செலவினங்கள் பட்டியல் சாதி, பழங்குடி, மற்றவர்கள் என தனித்  தனியாக 2021 - 22 ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசுகள்/ யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றியஅரசால் அனுப்பப்படும். இன்னும் மேம்பட்ட கணக்கு முறைமையை கொண்டு வரவே இது செய்யப்படுகிறது. 

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தின்படி ஒவ்வொரு இல்லத்திலும் வேலைசெய்யவும், திறன் அற்ற உடல் உழைப்பு செலுத்தவும் தயாராக உள்ள வயது வந்தவர்களுக்கு ஆண்டிற்கு 100 நாள் வேலை வழங்கப்படும். மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியில் இருந்துகூடுதலாக 50 நாள் வேலை தரலாம். ஒன்றிய விவசாய, விவசாயிகள் நல அமைச்சக பரிந்துரையின்படி, வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் 50 நாட்கள் வேலை, அதாவது 100 நாட்களுக்கு மிகுதியாக, வழங்கப்படும். இப்போதைக்கு இத் திட்டத்தின் வேலை நாட்களை அதிகரிக்கும்  திட்டம் ஏதும்அரசிடம் இல்லை. இத்திட்டத்தின் முதல் அத்தியாயம் பத்தி 5 இல் தனிச் சொத்து உருவாக்க வேலைகள் மேற்கொள்ளப்படும் போது பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் நிலம், வீட்டு மனை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். 

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் எல்லா கிராமப் புற உழைப்பாளி மக்களுக்கும் பொதுவான திட்டம். இதில் பட்டியல்சாதி பழங்குடி மக்களின் கூலிக் கணக்கை தனி பட்ஜெட் தலைப்பின் கீழ் வகைப்படுத்தவேண்டியதன் தேவை என்ன? அவர்களுக்கென்று வேலை நாள் அதிகரிப்பு அல்லது சிறப்பு திட்டங்கள் ஏதும் புதிதாக வகுக்கப்படவில்லை. வெறும் கணக்குக்காக என்று அமைச்சரின் பதில்தெரிவிக்கிறது. கணக்கிற்காகவா, கழிப்பதற்காகவா என்ற சந்தேகம் வருகிறது. எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீது கை வைப்பதற்கான உள் நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்களை கவனிக்க வேண்டிய அரசாங்கம் இப்படி சாதிய ரீதியான பிரிவினையை கணக்குகளில் எந்த நல்ல நோக்கமும் இல்லாமல் கொண்டு வருவதை கைவிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். 

;