india

img

ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சைநோய் தாக்கும்..... எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

புதுதில்லி:
ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்தினால்  கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். 

கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகிற நோயாளிகளுக்கு, ‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும்  கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் இந்த நோய் அரிதாக உருவாவதாக கூறப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான். இந்த நோய் குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு ஆளாகி, உயிரிழப்பும் ஏற்படுகிறது. கணிசமாக இந்த தொற்றுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று மனிதர்களுக்குப் புதிதானது அல்ல. ஏற்கெனவே காற்றில் இருப்பதுதான். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர்உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது எளிதாக மனிதர்களைத் தாக்குகிறது. காற்று, மண், உணவில் கூட இந்த கருப்பு பூஞ்சை நோய் பாக்டீரியா இருக்கும். ஆனால், இதன் தீவிரத்தன்மை மிகக்குறைவுதான்.

முகக்கவசம் அவசியம்
ஆதலால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும் வெளியே செல்லும்போது, முகக்கவசம் கண்டிப்பாகஅணிய வேண்டும். குறிப்பாக கட்டுமானப் பகுதிகளுக்குச் செல்லும்போது, முகக்கவசம் அணிய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவ மனையில் கருப்பு பூஞ்சையால் பாதிகப்பட்டு 23 பேர் சிகிச்சையில் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இரண்டாம் தர தொற்றான கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு அதிகமான கவனம் செலுத்த அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

இந்த தொற்று புதிதானது அல்ல 2003ம் ஆண்டு சார்ஸ் தொற்று உருவானபோது கூட கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டது. கொரோனா பாதிப்பின்போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்தை அதிகம் எடுத்துக்கொண்டவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் ஸ்டீராய்டு மருந்து கொடுத்தாலே போதுமானது. மூளை, மூக்கு, கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோயால், சில நேரங்களில் பார்வையை இழக்க நேரிடும், சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்” என்று தெரிவித்தார்.

;