india

img

கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியா அவசரகதியில் அனுமதி வழங்கியதா? வல்லுநர்கள் எச்சரிக்கை

புதுதில்லி:
பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே இந்தியா திடீரென அனுமதி வழங்கிய கோவேக்சின் தடுப்பூசி குறித்து நிபுணர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு - அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கியது.தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது இந்தியாவின் நிலையை மாற்றக் கூடியது என தமது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்றிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் நிபுணர்கள் இது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என எச்சரிக்கிறார்கள்.

‘‘ஆல் இந்தியா டிரக் ஆக்‌ஷன் நெட்வொர்க்’’ (ஏ.ஐ.டி.ஏ.என்) என்ற சுகாதார கண்காணிப்பு அமைப்பு, இந்திய அரசு கோவேக்சினுக்கு அனுமதி வழங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியிருக்கிறது. “கோவேக்சினின் செயல் திறன் குறித்த தரவுகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. மேலும்,இதுபோன்று வெளிப்படைத்தன்மை இல்லாததுநிறைய கேள்விகளை உருவாக்கும். இதுஇந்தியாவின் அறிவியல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அமைப்புகளின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த உதவாது” என்று ஏ.ஐ.டி.ஏ.என் அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் கொரோனாவுக்கு எதிராக நல்ல நோய்எதிர்ப்புத் திறனை வெளிப்படுத்துகிறது என்றும்இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி வேணுகோபால் ஜி சோமனி குறிப்பிட்டபிறகு, ஏ.ஐ.டி.ஏ.என் அமைப்பின் இந்த அறிக்கை வெளியானது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான வேணுகோபால் ஜி சோமனி,”கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த கொரோனா தடுப்பூசிகள் 100% பாதுகாப்பானவை. மிகச் சிறிய அளவில்பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் கூட நாங்கள்மருந்தை அனுமதிக்கமாட்டோம். எல்லா தடுப்பூசிகளிலும் காய்ச்சல், வலி மற்றும் சில ஒவ்வாமைகள் இருக்கும். கொரோனா தடுப்பூசிஎடுத்துக் கொள்பவர்கள் ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதுமுற்றிலும் தவறான தகவல்” என்று அவர் கூறினார்.ஆனால் “முறையாக ஆராய்ச்சி செய்யப்படாத கொரோனா தடுப்பு மருந்துக்கு எந்த அறிவியல் அடிப்படையில் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கோவேக்சின் மருந்து கொரோனாவின் புதிய திரிபுக்கு எதிராக பயன்படலாம் என்கிற கருத்தை ஆதரிக்கும் தரவுகள் எதுவும் சோதனை முடிவுகளில் இல்லை” என ஏ.ஐ.டி.ஏ.என் அமைப்பு கூறியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக நிறைய சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. எதிர்கட்சித் தலைவர்களும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.அரசு அனுமதி அளித்தவுடன், ஞாயிறன்று இரவு இந்திய ட்விட்டரில் கோவேக்சின் தொடர்பாக கடுமையான விவாதங்கள் நடந்தன. கோவேக்சினுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதி, கொரோனா தடுப்பு மருந்து அனுமதிக்கான அரசு வெளியிட்டிருக்கும் வழிமுறைகளுக்கே முரணாக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி உள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “கோவேக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்டமருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. எனவே, முன்கூட்டியே அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது. 3ஆம் கட்ட பரிசோதனை முடியும் வரை கோவேக்சின் தடுப்பூசியை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை வலியுறுத்துகிறேன். அதுவரை, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்தலாம்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்சனையை அரசியலாக்குவது ஏற்க முடியாதது, மிகவும்அதிர்ச்சிகரமானது. கொரோனா தடுப்பூசிகளுக்கு அறிவியல் பூர்வமான வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதித்ததை சசி தரூர், அகிலேஷ் யாதவ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நம்பிக்கையிழக்கச் செய்யக் கூடாது’’ என்று தெரிவித்தார்.

கோவேக்சின் பேக்கப் மட்டுமே : எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்
கோவேக்சின் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது முதன்மையான தடுப்பூசியாகப் பயன்படுத்தப்படாது என்று விளக்கமளிக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப்குலேரியா கூறுகையில், “இரு தடுப்பூசிக்கும்ஒரே மாதிரியான அனுமதி வழங்கப்பட வில்லை. கோவேக்சின் ஒரு பேக்கப் தான். 

கொரோனா பாதிப்பு உயரவில்லை என்றால் சீரம் தடுப்பூசியே (கோவிஷீல்டு) பயன்படுத்தப் படும். அடுத்த மாத தொடக்கத்தில் தான் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிபற்றிய தரவுகள் நமக்குக் கிடைக்கும். அது திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், சீரம் தடுப்பூசிக்கு வழங்கப்பட்டதைப் போன்ற அனுமதி கோவேக்சினுக்கும் வழங்கப்படும்.கோவேக்சின் பாதுகாப்பானது என்பதாலேயே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அதன்செயல்திறன் தான் நமக்கு இப்போது தெரியாது. தற்போது கோவேக்சினை உற்பத்தி செய்து சேமித்து வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளைப்போல வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்தால் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி மட்டும் நமக்குபோதாது. இதன் காரணமாகவே பாரத்பயோடெக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. கோவேக்சின் தொடர்ந்து மருத்துவ சோதனைகளிலேயே பயன்படுத்தப்படும். இதனால் பாதுகாப்பு தன்மை மற்றும் பக்கவிளைவுகள் தொடர்ந்து நெருக்கமாகக் கண்காணிக்கப்படும். இவை தற்போது வழக்கமான தடுப்பூசியைப் போல எல்லா இடங்களிலும் கிடைக்காது. சோதனைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும்’ என்றார்.

விலங்குகளிடம் சோதனை
இதனிடையே, பாரத் பயோடெக் உடன் இணைந்து கோவேக்சினை உருவாக்கியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் பார்கவா கூறுகையில், “இதன் செயல்திறனை புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில் சோதனை செய்தோம். அங்கு விலங்குகளுக்கு இந்தத் தடுப்பூசி அளிக்கப்பட்டது. அப்போது இதன் செயல்திறன் திருப்திகரமாகவே இருந்தது.அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் 375 பேருக்கும், 2ஆம் கட்ட சோதனையில் 380 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 3ஆம் சோதனையிலும் 22,500 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை அவர்களுக்கு எவ்வித மோசமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. 

தற்போது உருமாறிய கொரோனாவின் பாதிப்பு 34 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சில தடுப்பூசிகள் வைரசின் புரதத்தை மட்டும் அழிக்கும். இதுபோன்ற தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவுக்கு எதிராகப் பலன் அளிக்காமல் போகலாம். ஆனால் கோவேக்சின் முழுமையாக வைரசை அழிக்கும் என்பதால், இது நிச்சயம் பலன் அளிக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், இதை உறுதி செய்ய அதிகளவில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்” என்றார்.

;