india

கொரோனா அதிர்ச்சியால் மனச்சோர்வு, பீதி, தூக்கமின்மை அதிகரிக்கிறது....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று மனித வாழ்க்கையையே தடம் புரளச்செய்து விட்டது. பெருந்தொற்று தாக்கத்திலிருந்து மீண்டாலும் பல்வேறு பிரச்சனைகளால் ஒருபக்கம் அல்லாடுகிறார்கள். 

மற்றொரு பக்கம் சிலர் கொரோனாவால் தங்களுக்கு அன்பானவர்களை இழந்து தவிக்கிறார்கள். ஊரடங்கு, பொது முடக்கம் போன்றவற்றால் வேலையின்மையாலும் வருமான இழப்பாலும் அவதிப்படுகிறார்கள்.கொரோனாவின் 2 ஆவது அலையால் பெரும் பாதிப்புக்கு ஆளான தலைநகர் தில்லியில், தற்போது கொரோனாவாலும், அதன் நிமித்தமான கட்டுப்பாடுகளாலும், அதிர்ச்சியாலும், இன்ன பிற பிரச்சனைகளாலும் மனச்சோர்வு, பீதி, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு மனநல பிரச்சனைகளால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி பி.எல்.கே.மருத்துவமனையின் மனநல மருத்துவ ஆலோசகர் மணிஷ் ஜெயின் கூறுகையில், “சோகம், தனிமைப்படுத்துதல், தங்களுக்கு அன்பானவர்களை இழந்து விடுவோமா என்ற பயத்தினால் ஏற்படுகிற துக்கம், வருமான இழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சனைகளுக்காக வருகிறவர்களின் எண்ணிக்கை 30-40 சதவீதம் அதிகரித்துள்ளது” என கூறினார்.மேலும் அவர் கூறும்போது, “ஏற்கனவே மனநல பிரச்சனை உள்ளவர்கள், தொற்றுநோயின்போது, மேலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். வாழ்வில் விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகள், கொரோனா பயம் போன்றவை மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன” எனவும் தெரிவித்தார்.

தில்லி கல்யாண் பானர்ஜி கிளினிக் மருத்துவர்கள், உளவியல், மன நல பிரச்சனைகள் காரணமாக தற்போது சிகிச்சை பெற வருகிற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். இந்த கிளினிக்கிற்கு மட்டுமே மனநல பிரச்சனைக்காக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.கொரோனா காலத்துக்கு முன்பாக சராசரியாக 1,750 மருந்து சீட்டுகள் எழுதித்தரப்படுவது, இப்போது 2,500 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படாதவர்கள், ஊரடங்கால் பாதிக்கப்படாதவர்கள்கூட இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

;