india

img

போராட்டத்தை சீர்குலைத்து, விவசாயிகள் சங்கத் தலைவர்களை கொல்லச் சதி.... விவசாயிகள் சங்கத் தலைவர்கள் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் 4 பேரைக் கொன்று, டிராக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்குலைவையும் உருவாக்க சதித்திட்டம் நடக்கிறது என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 60 நாட்களாக போராட்டம்நடத்தி வருகின்றனர்.  
11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில் வெள்ளியன்று இரவு சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடத்திவந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் இருப்பதைப் பார்த்து அவரைப் பிடித்தனர். அவரிடம் விவசாயிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.பிடிபட்ட அந்த நபரை வைத்துக்கொண்டு, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விவசாயிகள் சங்கத் தலைவர் குல்வந்த் சிங் சாந்து கூறுகையில், நாங்கள் போராடும் போராட்டக் களத்தில் முகமூடி அணிந்த ஒருவரைப் பிடித்துள்ளோம். அந்த நபரை ஹரியானா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். 

நாங்கள் நடத்தும் போராட்டத்தைச் சீர்குலைக்க சதி நடப்பதாக நாங்கள் கருதுகிறோம்.  போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் 4 பேரைக் கொலை செய்யவே அந்த நபர் வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜனவரி 26 ஆம் தேதி தில்லியில் விவசாயிகள் சார்பில் நடக்கும் டிராக்டர் பேரணியைச் சீர்குலைக்கவும் சதி நடக்கிறது.தில்லி காவல்துறையினர் மீது அந்த நபர்துப்பாக்கிச் சூடு நடத்தி, டிராக்டர் பேரணியைச் சீர்குலைக்கவும், இதன் மூலம் போராடும் விவசாயிகள் மீது காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என அந்த நபர் கூறினார் என்று குல்வந்த் சிங் தெரிவித்தார்.

                                                            ******************

விவசாயிகள் சங்க தலைவர்களை சுட்டுக் கொல்ல முயன்ற நபர் கைது

தில்லி போராட்டத்தில் விவசாயிகளிடம் பிடிபட்ட இளைஞனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விவசாய தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாக ஒப்புக் கொண்டார். விவசாயிகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தம்முடன் இதுபோல் பத்து பேர் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்டமுயற்சிப்பதாகவும் ஜனவரி 24 ஆம் தேதி, நான்கு பேரை மேடையில் சுட்டுக் கொல்லும் திட்டம் உள்ளது. எங்களுக்கு பிரதீப் சிங் பயிற்சி அளித்தார் .அவர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி .அவர் எங்களைச் சந்திக்கவரும்போதெல்லாம்  முகமூடி அணிந்து இருப்பார் என்று பிடிபட்ட நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு  : பிடிபட்ட நபரை (முகத்தை மறைத்திருப்பவர்) செய்தியாளர்களிடம் காண்பித்த சங்கத்தலைவர்கள்

;