புதுதில்லி:
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா ஆகியவற்றின் கூட்டுடன் இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கோவாக்சின்’ தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.இரண்டாம் கட்டமாக 45 வயதுக்குமேற்பட்ட இணைநோய் கொண்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (இணைநோய் இல்லாதோருக்கும்) தடுப்பூசி வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசிசெலுத்தும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 10.45 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்தியாவில் 3 ஆவது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வரும்.உலகிலேயே முதல் முறையாக பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி ஸ்புட்னிக் வி தடுப்பூசிதான். ஆனாலும், தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்து வந்தனர். அதன்பின்னர், ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில் 92 சதவீதம் திறனுடன் இருப்பதாக ரஷ்யா தெரிவித்தது. பின்னர், ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பு மருந்து 2, 3 ஆம் கட்ட மனித சோதனைகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ்நிறுவனத்துக்கு 10 கோடி எண்ணிக்கையில் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது.
****************
அரசாங்கத்திடம் ஏதுமில்லை
தடுப்பூசி பற்றாக்குறை தீவிரமாக எழுந்துள்ள நிலையில், ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிக்கு ஏன் அனுமதி தராமல் இழுத்தடிக்கிறீர்கள்? என்று மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தன. இந்நிலையில், ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து திங்களன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, “இது மிகவும் எளிமையான விஷயம். அரசாங்கத்திடம் ஏதுமில்லை. எதிர்க்கட்சிகள் அளிக்கும் சிறந்த ஆலோசனைகளை செயல்படுத்துவதைத் தவிர” என்று கூறியுள்ளார்.