புதுதில்லி:
கொரோனா இரண்டாவதுஅலையின் தாக்கம் வடமாநிலங்களை புரட்டிப்போட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் மக்கள்அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
மருத்துவமனை வாசல்களில் காத்துக்கிடக்கும் நோயாளிகள், இறந்தவர்களின் இறுதிச்சடங்கிற்காக சடலங்களுடன் காத்திருக்கும் உறவினர்கள், பற்றி எரிந்து கொண்டிருக்கும் மயானங்கள் என பேரழிவின் சாட்சிகளாய் மாறி காட்சியளிக்கின்றன. நோயின் தீவிரத்தோடு வருபவர்களை அனுமதிக்க மருத்துவமனைகளில் இடமில்லை. மருத்துவமனைகளுக்கு உள்ளேயும் போதுமானஅளவு மருத்துவ உபகரணங்கள் இல்லை. ஆக்சிஜன்சிலிண்டர்கள் பற்றாக்குறை என அல்லாடி கொண்டிருக்கின்றன வட மாநிலங்கள். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாப்பத்தில் மயான வாசல்களில் சடலங்களை வைத்துக் கொண்டு காத்திருக்கின்றனர் உறவினர்கள். ஒரு புறம் மயானத்தில் பிணங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. இதே நிலை தான் மருத்துவமனை வாசல்களிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளை படுக்க வைப்பதற்கு கூட இடமின்றி அல்லாடிக்கொண்டிருக்கிறது உத்தரப்பிரதேசம். லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனை வளாகங்களில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்களிலேயே காத்துக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.