india

img

பாஜக கட்டுப்பாட்டிற்கு போய்விட்ட அரசியல் சட்ட அமைப்புகள்.... பல்கலைக்கழக கலந்துரையாடலில் ராகுல் பேச்சு....

புதுதில்லி:
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல், ‘உலகஜனநாயகங்கள்’ என்ற தலைப்பில்நடத்திய இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியுள்ளார்.

ஹார்வர்டு கென்னடி பள்ளியின் பேராசிரியர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், பொதுச்சேவை, கொரோனாவைரஸ் தொற்று, அரசியல், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட்கூட்டணி’ சீனா - இந்தியா இடையிலான பிரச்சனை என பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி களுக்கு ராகுல் பதிலளித்துள்ளார். இந்த கலந்துரையாடலில்தான், “இந்தியாவில் தற்போது அரசியல் சட்ட அமைப்புகள் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டுள்ளன. நியாயமாக - நடுநிலையாக இருக்க வேண்டிய அரசு அமைப்புகள் இப்போது அவ்வாறு இல்லை” என்று கூறியுள்ளார்.“ஒருவர் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் அமைப்புகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். நீதித்துறை அனைவரையும் பாதுகாப்பதாக இருக்கவேண்டும். ஊடகங்கள் ஓரளவுக்காவது சுதந்திரமாக இயங்க வேண்டும்.அரசியல் கட்சிகள் அனைத்துமே சமநிலையில் நிதி ஆதாரத்தைப் பெருக் கிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அசாமில் வாக்குப்பதிவு இயந்திரம் பாஜக வேட்பாளர் காரில் கொண்டுசெல்லப்படும் வீடியோவை எங்கள் (காங்கிரஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் எனக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், அந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவின் தேசிய ஊடகங்களில் எதுவும்பேசப்படவில்லை. நிதி மற்றும் ஊடகத்துறை மீது பாஜக முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. 

தேர்தலில் காங்கிரஸ் மட்டுமே வெற்றியை தவறவிடுவதில்லை. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாதகாங்கிரஸ் என எல்லாக் கட்சிகளுமே தோற்கின்றன. இவற்றைத் தவிர்க்க சுதந்திரமான அரசியலமைப்புகள் வேண்டும். அது தற்போது இல்லை” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.“அடிப்படையில் அமெரிக்கா ஒருஅறிவார்ந்த சமூகம் என்று நான் நம்புகிறேன். அமெரிக்க அரசியலமைப்பில்சுதந்திரம் பற்றிய சிந்தனை மிகவும்சக்திவாய்ந்தது ஆகும். அதனை அமெரிக்கர்கள் தொடர்ந்து பாதுகாக்கவேண்டும்” என்று கலந்துரையாடலின் போது கூறியிருக்கும் ராகுல் காந்தி, ஆனால், இந்திய ஜனநாயக நிலைமைகள் குறித்து, சமீபத்தில் அமெரிக்கா எதுவும் கூறுவதில்லை; மவுனம் காத்து வருகிறது என்றும் தெரிவித் துள்ளார்.

                              ***************  

பொருளாதார வளர்ச்சியை விட வேலைவாய்ப்புக்கே முன்னுரிமை

நீங்கள் இந்தியப் பிரதமர் ஆனால், எதற்கு முன்னுரிமை தருவீர்கள்? என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக கலந்துரையாடலின் போது ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நான் பிரதமரானால் வளர்ச்சியைக்காட்டிலும் வேலைவாய்ப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பேன்” என்று அவர் பதிலளித்துள்ளார்.“எனக்கு 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியில் பெரிய ஆர்வமில்லை. ஏனெனில், அந்தப் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக வேலைவாய்ப்பை உருவாக்காவிட்டால் வளர்ச்சி அர்த்தமற்றதாகிவிடும். வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குதலுக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும். இதைத் தான் சீனர்கள் செய்கின்றனர். எந்த ஒரு சீனத் தலைவரும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தனக்கு பிரச்சனை இருக்குமென்று கூறமாட்டார். அதனாலேயே சொல்கிறேன், நான் பிரதமரானால் எனது கவனம் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே மையப்புள்ளியாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதையே மையமாகக் கொண்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

;