கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து பல மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் இறப்பு எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்து வடிவில் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாவது;
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இயற்கை காரணங்கள், விபத்துகள், உடல் உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் பயிலும் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
34 நாடுகளில் இந்திய மாணவர்கள் பயின்று வரும் நிலையில், கனடாவில் தான் அதிகமாக 91 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்குப் பிறகு, 2ஆம் இடத்தில் இங்கிலாந்தில் 48 பேரும், ரஷ்யாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும் சைப்ரஸில் 14 பேரும், பிலிப்பைன்ஸ் மற்றும் இத்தாலியில் தலா 10 பேர், கத்தார், சீனா மற்றும் கிர்கிஸ்தானில் தலா 9 பேர் உயிரிழந்துள்ளனர் என மொத்தம் 403 இந்திய மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் (2018-2023) உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும், வெளிநாடுகளில் இருக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.
இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சனைகளுக்கும் வெளிநாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்னுரிமை அடிப்படையில் பதிலளித்து வருகின்றன. இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரிவித்தார்.