india

img

காதலர் சந்திப்பை தடுப்பதற்காக ஹோட்டலை சூறையாடி அராஜகம்....பாஜக முன்னாள் எம்எல்ஏ உட்பட 17 பேர் கைது....

போபால்:
பிப்ரவரி 14- உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆண்களும்- பெண்களும் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பரிசுப்பொருள் கொடுத்து, அன்பைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

சாதி, சமயம், இனம், மொழி, நிறம் கடந்த இந்த அன்புப் பரிமாற்றம், வெறுப்புச் சிந்தனையைக் கொண்ட அடிப்படைவாதிகளுக்கு எரிச்சல் ஊட்டக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் காதலிப்பதையும், அதற்கென ஒரு நாள் கொண்டாடப்படுவதையும் இந்துத்துவா கும்பல் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. காதலர் தினத்தன்று தங்களின் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்காக கூடுவோர் மீது வன்முறைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது.அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், காதலர் தினம் கொண்டாடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்குஉள்ள ஹுக்கா பார் என்ற உணவு விடுதியை இந்துத்துவா கும்பல் ஒன்று அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளது.

கைகளில் காவிக்கொடிகளை ஏந்தி, ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி வந்த அவர்கள், ஹாக்கி மட்டைகளை வைத்து, ஹோட்டலில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இது டிரைலர்தான் என்றும், அடுத்தமுறை மொத்தமாக அழித்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்த அவர்கள், தங்களை பாஜக-வின் இளைஞர் அமைப்பான ‘பாரதிய யுவ மோர்ச்சா’ என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.இதுதொடர்பாக ஹோட்டல் மேலாளர் நரேந்திர குமார்  அளித்த புகாரின்பேரில், பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திரநாத் சிங் உட்பட 17 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

;