திருவனந்தபுரம்;
தொடர் வெற்றியை சாதித்து கேரளத்தில் எல்டிஎப் பெற்ற வரலாற்று வெற்றியை வெள்ளியன்று (மே.8) மாலை, மாநிலம் முழுவதும் வீட்டு முற்றங்களில் வெற்றிச்சுடர் ஏற்றியும் இனிப்புகள் பரிமாறியும் மக்கள் கொண்டாடினர். நிறுவனங்களுக்கு முன்பும் பல்வேறு கட்சி அலுவலகங்கள் முன்பும் வெற்றிச்சுடர் ஒளி பரவியது.
சிபிஎம் மாநிலக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி மையம்வெற்றிச் சுடரொளியில் திளைத்தது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கொண்டாட்டங்களுக்கு தலைமை வகித்தார். முதல்வர் பினராயி விஜயன் தனது அதிகாரப்பூர்வ இல்லமான கிளிப் ஹவுஸில் குடும்பத்துடன் ஒரு விளக்கு ஏற்றினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் வெற்றி தினத்தை ஏகேஜி மையத்திற்கு அருகிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கொண்டாடினார். அமைச்சர்கள் எம்.எம்.மணி, கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் அவரவர் வீடுகளில் வெற்றிச் சுடரேற்றி கொண்டாடினர். திருவனந்தபுரம் மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பன் தலைமையில் மாவட்டக் குழு அலுவலகத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. சிபிஐ மாநிலக் குழு அலுவலகமான எம்.என் நினைவகத்தில் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் பன்னியன் ரவீந்திரன் வெற்றிச் சுடரை ஏற்றினார்.