பெங்களூரு, ஜன.21- லேபர் கோடுகள் (Labour codes) என்ற பெயரில் தொழிலாளர்களுக்குக் கேடு பயக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டங்களும் கிழித்தெறியப்பட வேண்டும் என்று சிஐடியு-வின் அகில இந்திய மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஒன்றிய அரசாங்கத்தில் பொறுப்பேற்றபின்னர், தொழிலாளர்களைக் காவு கொடுத்து, முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுப்பதற்காக, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற பல்வேறு சலுகைகளையும் பறித்திடும் விதத்தில், நாட்டின் சட்டங்கள் பலவற்றில் தொழிலாளர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறிப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. பின்னர் 2019இல் பாஜக மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின் இந்நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
நாட்டில் அமலிலிருந்த 29 தொழிலாளர் நல சட்டங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, அதற்குப் பதிலாக, நான்கே நான்கு லேபர் கோடுகள் (Labour Codes) எனப்படும் தொழிலாளர் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஊதியங்கள் மீதான சட்டம், தொழில் உறவுகள் மீதான சட்டம், சமூகப் பாதுகாப்பு மீதான சட்டம் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் மீதான சட்டம் எனக் கொண்டுவந்தது. இதன் நோக்கம் தொழிலாளர்கள் இதுநாள் வரையிலும் பெற்றுவந்த உரிமைகள், ஊதியங்கள், சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலத் திட்டங்கள் அனைத்தையும் கணிசமான அளவிற்கு ஒழித்துக்கட்டுவது என்பதேயாகும். இவை அனைத்தும் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியேயாகும். இவ்வாறு கொண்டுவந்ததன் மூலம் ஸ்தாபனரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களையே ஸ்தாபனமற்றவர்களாக, முறைசாராத் தொழிலாளர்கள் அணியில் சேர்க்கும் விதத்தில் தூக்கி எறிவதேயாகும். எனவேதான் இந்த மாற்றங்களை முதலாளிகள் வரவேற்றிருக்கிறார்கள்.
ஊதியங்கள் மீதான சட்டம் நாடாளுமன்றத்தில் 2019இல நிறைவேற்றப்பட்ட அதே சமயத்தில், மற்ற மூன்று சட்டங்களும் 2020 செப்டம்பரில், எதிர்க்கட்சியினர் விவசாய சட்டமுன்வடிவுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த சமயத்தில், எவ்வித விவாதமுமின்றி, நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்கள் (labour codes) காரணமாக, நாட்டில் பெரும்பாலான தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். முதலாளிகளுக்கு தொழிலாளர்களைத் தூக்கி எறிவதற்கு மேலும் பல வழிகளை இவை காட்டி இருக்கின்றன.
இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தொழிலாளர் சட்டங்களில், அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்டப்பிரிவுகளை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இவற்றுக்காக மீண்டும் நாடாளுமன்றத்தையோ, தொழிற்சங்கங்களையோ அணுக வேண்டியதில்லை.
எனவேதான் அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்குக் கேடு பயக்கும் இந்த லேபர் கோடுகளை (labour codes) கிழித்தெறிய வேண்டும் என்று கோரி, நாடு தழுவிய அளவில் இரு வேலை நிறுத்தங்களையும் நடத்தியுள்ளன. ஆனாலும், அதிகார போதையில் உள்ள மோடி அரசாங்கம் இதனைச் செய்ய மறுக்கிறது.
இந்தத் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராகவும், மோடி அரசாங்கம் தன்னுடைய தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நவீன தாராளமயக் கொள்கைகளைக் மாற்றியமைத்திட வேண்டும் என்றும் கோரியும் நாடு முழுதும் உள்ள தொழிலாளர்களை சிஐடியு-வின் 17ஆவது மாநாடு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு தொழிலாளர் வர்க்கம் தங்கள் அடிப்படை உரிமைகள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராகப் போராடும்போது, அதற்கு நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளும் முழுமையாக ஆதரவு அளித்திட வேண்டும் என்றும் மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
(ந.நி.)