india

img

தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட குஜராத் மசூதி

குஜராத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில்  வதோரா மசூதி தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாது அலையால் உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக குஜராத், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. 
இதனால், அம்மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடமில்லாத சூழல் நிலவுகிறது. இதற்கு அங்கு படுக்கைகளுக்கான இடமின்மை முக்கியக் காரணம்.
இந்தநிலையில், குஜராத்தின் வதோராவிலுள்ள ஜஹாங்கீர்புராவின் முஸ்லிம்கள் தம் மசூதியை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற முன்வந்தனர். அன்றாடம் ஐந்துவேளை தொழுகைக்கான இந்த மசூதியில் ரம்ஜான் மாதத்தில் அதிகக் கூட்டம் வருவது உண்டு. எனினும், இம்மசூதியில் தொழுகையை ஜஹாங்கீர்புரா முஸ்லிம்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கு பதிலாக மசூதியினுள் 50 படுக்கைகளுடன் கொரோனா நோயாளிகளுக்கானத் தற்காலிக மருத்துவமனையாக மாற்றிவிட்டனர். இதனுள், இந்து, முஸ்லீம், கிறித்தவர் என சாதி, மத பேதமின்றி அனைவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இதுகுறித்து ஜஹாங்கீர்புரா மசூதியின் தலைமை நிர்வாகியான இர்பான் ஷேக் கூறியதாவது, ''சிக்கலான தற்போதைய சூழலில் அனைவருக்கும் உதவுவது மிகவும் முக்கியம். அரசு, தனியார் என அனைத்து மருத்துவமனைகளிலும் இடமில்லாமல் பல உயிர்கள் பலியாகி வருகின்றன. இதைக் காக்க அரசு நிர்வாகத்திடம் மட்டும் முழு பாரத்தையும் சுமத்தாமல் அதை பகிர்ந்து கொள்ள நாம் அனைவரும் முன்வர வேண்டும்.
இதை உணர்ந்து நாம் தொழுகையை தம் வீடுகளிலேயே நடத்திக் கொள்ள முடிவு செய்தோம். எங்கள் மசூதியை ஆக்ஸிஜன் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன் மருத்துவமனையாக மாற்றி உள்ளோம்.
அல்லாவின் இடத்தில் அவருக்காக ரம்ஜான் மாதத்தில் செய்ய வேண்டிய புண்ணியம் இதை விட சிறந்ததாக வேறு என்ன இருக்க முடியும்? மனிதநேயத்தை விட மதம் பெரியது அல்ல என்பது எங்கள் கருத்து'' எனத் தெரிவித்தார்.
குஜராத்தின் மற்றொரு முக்கிய நகரமான கோத்ராவின் மசூதியிலும் ஒரு பகுதி கொரோனா சிகிச்சைக்காக அனைத்து மதத்தினரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷேக் மஹாவர் சாலையிலுள்ள ஆதம் எனும் அந்த இரண்டடுக்கு மசூதியின் தரைத்தளம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே சிகிச்சைக்கு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;