இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க 18% வரிவிதிக்கும் என்றும் அமெரிக்கப் பொருட்கள் குறிப்பாக உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பியுஷ் கோயல் தனது பதிவில் சோளம், கோதுமை, சோயா, அரிசி, பால், சில இறைச்சி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
ஆனால், கூட்டறிக்கையில் wide range of உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கான வரி நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில் ரஷ்ய எண்ணெய்யை வாங்க மாட்டோம் என ஒப்புக்கொண்டதால்தான் 25% வரியை நீக்குகிறேன், எண்ணெய் வாங்குவது தெரியவந்தால் மீண்டும் வரிவிதிப்பேன் என தனது உத்தரவில் மிரட்டுகிறார் ட்ரம்ப். இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ட்ரம்புக்கு வழங்கினாரா பிரதமர் மோடி?
இதை இந்தியாவுக்குச் சாதகமான ஒப்பந்தம் எனக் கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
