india

img

தில்லி கார் வெடிப்பு - சிறப்புக் குழுவை அமைத்தது என்ஐஏ!

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை என்ஐஏ அமைத்துள்ளது.
தில்லியில், பரபரப்பு மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை 6.52 மணி அளவில் வெள்ளை நிற ஹுண்டாய் ஐ-20 கார், மெதுவாக சென்ற நிலையில் திடீரென வெடித்துச் சிதறியது.  இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் படுகாய மடைந்த நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து தில்லி செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செங்கோட்டைக்கும் 3 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. முதலில், இதனை குண்டுவெடிப்பு இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்திருந்தார். வெறும் கார் வெடிப்பு என்று சமாளித்தார். ஆனால், தில்லி காவல் துறை,  என்ஐஏ, என்எஸ்ஜி போன்ற அமைப்புகள் நடத்திய விசாரணையில், வெடித்துச் சிதறிய ஹூண்டாய் காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது கண்டறியப்பட்டதாக தற்போது மோடி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், காரை ஓட்டி வந்தவரின் பெயர் உமர் நபி என்றும், காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய்யைக் கொண்டு வெடி விபத்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் உமர் நபியும் உயிரிழந்ததால், தற்கொலை தாக்குதலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 
இதையடுத்து, குண்டு வெடிப்பு வழக்கானது, தில்லி காவல்துறை வசமிருந்து தேசிய புலனாய்வு முகமை (NIA)-க்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து காஷ்மீர், ஹரியானா, தில்லி உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ தீவிர சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரிக்க ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை என்ஐஏ அமைத்துள்ளது.