காரைக்கால், டிச.3- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, காரைக்கால் மீனவர்கள் 18 பேரை, இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை செவ்வாயன்று சிறை பிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை சிறை பிடித்ததோடு, 2 விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள கங்கேசன் முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.