தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு மாநிலம் முழுவதும் ஒரு குடம் நீருக்காக மக்கள் திண்டாடும் நிலையில் உள்ளனர். இந்தப் பிரச்சனையை ஆளுங்கட்சியான அதிமுக எதிர்கொள்ளும் விதம் கவலையளிப்பதாகவும், கேலிக்கூத்தாகவும் உள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என குடிநீர்ப் பஞ்சம் இருப்பதையே ஒப்புக் கொள்ள மறுத்தனர். இது எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரச்சாரம் என்றும் குடிநீர் பஞ்சம் என்பது வெறும் வதந்திதான் என்றும் கூறினர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தாமாக முன்வந்து குடிநீர் தர உதவுவதாக கூறியதைக் கூட ஏற்க மறுத்தனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், கேரளத்தின் உதவியை ஏற்பதாகவும் தினந்தோறும் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்குச்சால் ஓட்டினார். குடிநீர் பஞ்சம் உள்ளிட்ட தமிழகத்தின் தலையாயப் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ அல்லது சட்டமன்றக் கூட்டத்தையோ உடனடியாக கூட்டு மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஆளுங்கட்சி ஏற்கவில்லை. இந்த நிலையில் ஆளுங்கட்சியான அதிமுக மழை பெய்ய வேண்டும் என்பதற்காக தமிழ கத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வருண பகவானை வேண்டி யாகம் நடத்தியுள்ளனர். ஏற்கெனவே அரசின் சார்பில் இத்தகைய யாகங்கள் நடத்தப்பட்டன. இத்தகைய நம்பிக்கைகள் தனிப்பட்டவர்களுக்கு இருப்பது தனிப்பட்ட நம்பிக்கை என்று கொள்ளலாம். ஆனால் மாநிலத்தை ஆளக்கூடிய ஒரு கட்சியே இவ்வாறு செய்வதென்பது பிரச்சனையை திசைதிருப்புவது ஆகும். இந்த யாகங்களில் அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்கள் பங்கேற்றுள்ளனர். ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டியவற்றை விடுத்து இத்தகைய பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவது, அதுவும் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தப்பட்ட வழிபாடாக மாற்றுவது அவக்கேடாகும். சென்னை உட்பட தமிழகத்தின் பெரும் பாலான நகரங்களில் நிலத்தடி நீர் முற்றாக வற்றிக் கொண்டிருப்பதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை கள் குறித்து மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. நல்ல மழை பொழியும் காலங்களில் அதை சேமித்து வைப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிர மிக்கப்பட்டுவிட்டன. ஆளுங்கட்சியின் ஆதர வோடு நடைபெறும் மணற்கொள்ளை ஆறு களை மரணத்தின் விளிம்பை நோக்கித் தள்ளி விட்டது. நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறையில் போதிய ஊழியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் யாகம் நடத்துவது ஒன்றுதான் குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க ஒரே வழி என ஆளுங்கட்சி முடிவு செய் திருப்பது அவர்களின் பகுத்தறிவு பஞ்சத்தையே காட்டுகிறது.