குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் 28 வங்கிகளில் ரூ. 22,842 கோடி கடன் பெற்று மோசடி செய்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை நடைபெற்றிருக்கும் வங்கி மோசடி களில் இது மிகப்பெரிய மோசடியாகும். இதனைக் கண்காணித்து கழுத்தைப் பிடித்திருக்க வேண்டிய ஒன்றிய அரசு கள்ள மவுனம் காட்டுகிறது. இதனை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. மக்க ளின் பணம் சூறையாடப்பட்டிருப்பதற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
வழக்கம் போல் நிதியமைச்சர் சாக்குப் போக்கு சொல்லித் தப்பிக்க முயல்கிறார். 2014க்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே மோசடி புகார் எழுந்திருந்தது என்கிறார். சரி, ஏன் கடந்த 8 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், பதில் இல்லை. மோசடியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் வெளிநாடு களில் உள்ள தனது துணை நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. வேறு நிறுவனங்கள் பெய ரில் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறது. சிபிஐ அதுவரை என்ன செய்து கொண்டிருந்தது? அவற்றையெல்லாம் ஏன் இதுவரை கையகப் படுத்தவில்லை?
பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடி செய்து இதுவரை 51 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கின்றனர். 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மட்டும் 38 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கின்றனர். இவர்கள் ஒன்றிய அரசின் ஆதரவின்றி எப்படி எளிதாக தப்பிக்க முடியும்? கேட்டால், மோடி ஆட்சியில் ஊழல் மோசடிக ளுக்கு இடமில்லை என்கின்றனர். அப்படி யென்றால், 2019-20 ஆம் நிதியாண்டை விட 2020-21 ஆம் நிதியாண்டில் வங்கி மோசடி 35 சத விகிதம் எப்படி அதிகரித்தது?
2018 இல் மெகுல் சோக்சி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றார். அவர் டொமினிக்கன் உயர் நீதிமன்றத்தில் “நான் இந்தியாவிலிருந்து புறப்படும் முன்பு எனக்கெதிராக கைது வாரண்ட் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை” எனத் தெரிவித்திருக்கி றார். கைது வாரண்ட் பிறப்பிக்காமல் அவரை தப்ப வைத்தது யார்? நிதியமைச்சர் விளக்குவாரா? இந்த மோசடிப் பேர்வழிகளுக்கு மேலும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதுதானே மோடியின் கடன் மறுசீரமைப்பு திட்டம்; மறுக்க முடியுமா?.
இந்த திட்டத்தின் படி கடந்த 5 ஆண்டுகளில் வராக்கடன் ரூ.10.83 லட்சம் கோடி நீக்கப்பட்டிருக்கி றது. அது தொடர்பான 396 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 2.45 லட்சம் கோடிதான். வாங்கிய கடனில் 64 சதவிகிதம் மோசடி செய்தவர்களுக்கே பரிசாக வழங்கப்பட்டி ருக்கிறது. ஜெட்ஏர்வேஸ் வாங்கிய ரூ.7,807 கோடி கடனுக்கு ரூ.365 கோடி பெற்றுக் கொண்டு தீர்க்கப் பட்டிருக்கிறது. மோசடி செய்த ஜெட் ஏர்வேஸ்க்கு 95 சதவிகிதம் லாபம். இதுதானே மோடி அரசு வராக்கடனை வசூலிக்கும் லட்சணம்!
வங்கிகளில் உள்ள மக்களின் பணம் பாதுகாக் கப்பட வேண்டும் என்றால், முதலில் மோடி அரசின் கார்ப்பரேட் கூட்டுக் களவாணித்தனம் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசிற்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்.