headlines

img

தப்பிக்க முடியாது

தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு நாளிதழில் அளித்த பேட்டியில் ஆட்சியைதக்க வைத்துக் கொள்வதற்காக மாநில உரிமைகளில் மத்திய அரசுடன் அதிமுக அரசு சமரசம்செய்து கொள்வதாக பேசப்படுகிறதே என்றகேள்விக்கு அவரால் நேரடியாக பதிலளிக்க முடியவில்லை. அதனால் அவர்களது வழக்கமான பாணியிலேயே திமுக மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.மாநில உரிமையைப் பாதுகாத்ததாக, ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியது அதிமுக அரசுதான் என்று கூறி, இப்படி எத்தனையோ சம்பவங்களை பட்டியலிட முடியும் என்றுசொன்னவர் அதை சொல்வதற்கு வழியில்லாது,வார்த்தையில்லாது, வக்கில்லாது விட்டுவிட்டார்.ஏனென்றால் சொல்வதற்கு ஏதுமிருந்தால் தானே. நீட்தேர்வு விலக்கு சம்பந்தமாகவும் பிடிபடாமல் பதில் சொல்லி நழுவியிருக்கிறார். மத்தியஅரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தும் கூட நீதிமன்றம் அதை ஏற்கவில்லை என்றும் சப்பைக்கட்டுகட்டியிருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில்ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்குகோரும் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற இவர்களால் இயலவில்லைஎன்பதை மறைத்துவிட முயன்றிருக்கிறார். 


மத்திய அரசுக்கு அனுப்பிய தீர்மானத்தை உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பவேயில்லை என்பதை சிபிஎம் எம்.பி., டி.கே.ரங்கராஜன் அம்பலப்படுத்திய பிறகும் கூட அசராமல் பாஜக அரசின்நிலையை ஆதரிக்கிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது. மக்கள் போராட்டத்தால் என்பதை மறைத்து அதிமுகவின் சாதனை என்கிறார்! நீட் தேர்விலிருந்து மாணவர்களை காப்பாற்றுவதில் அக்கறை இல்லாமல் போனதற்கு காரணம் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்வதில் இருந்த அக்கறைதான். பாட்டாளி மக்கள் கட்சியுடனும் தேமுதிகவுடனும் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் அது லட்சியக் கூட்டணி, எங்களுடன் இருந்தால் அதுவே சந்தர்ப்பவாத கூட்டணியா? என்று கோபம் கொண்டிருக்கிறார். 


உண்மையில் பாமக மத்திய பாஜக அரசுக்கு ஜீரோவுக்கும் கீழே மதிப்பெண் கொடுத்தது. தமிழக அரசை இது அரசே அல்ல என்றது. எட்டுவழிச்சாலை திட்டம், நீட் தேர்வுக்கு எதிரான நிலை கொண்டிருந்தது. தேமுதிகவை பாஜகவை வைத்து பஞ்சாயத்து செய்து பேரம் நடத்தி வளைத்ததையும் தமிழகம்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் திமுக தலைமையிலான அணியில்உள்ள கட்சிகளோ கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மக்களின் கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டு இயக்கங்கள் நடத்தி, ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தன. முரண்பாடுகளின் மூட்டையும் ஒருமைப்பாட்டின் செயல்பாட்டையும் ஒன்றாக பார்க்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இவர்களது சந்தர்ப்பவாத கூட்டணியை புறக்கணித்து திமுக தலைமையிலான கொள்கை கூட்டணியை ஆதரித்து தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்வது நிச்சயம்.



;