headlines

img

கூட்டுக் களவாணிகளின் சுரங்கம்

உலகெங்கிலும் சுரங்கங்கள், பெரும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் தங்கு தடையற்ற சுரண்டலுக்கான களமாக மாற்றப் பட்டு வருகின்றன. அதனொரு பகுதியாக, இந்தியாவின் நிலக்கரி சுரங்கங்கள், மிக தாரா ளமாக அந்நிய பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனி களுக்கு திறந்துவிடப்பட இருக்கின்றன. தங்கு தடையில்லாமல் தாராளமாக உள்ளே வரும் வகையில், சுரங்கங்களை விலைக்கு வாங்கவும், நிலக்கரி வெட்டியெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு இந்திய நிலக்கரி கொள்கையில் மாற்றங்களை செய்திருக்கிறது. ஏற்கெனவே அமலில் உள்ள நிலக்கரி கொள்கையின் படி, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி படுகையில் நிலக்கரியை வெட்டி யெடுப்பதற்கான அனுமதி, அந்நிய நிறு வனங்களுக்கு - உள்நாட்டு தனியார் நிறு வனங்களுக்கு அளிக்கப்பட்டது. தற்போது இந்த வரையறை நீக்கப்பட்டு மின்சாரம், இரும்பு எஃகு, சிமெண்ட் உற்பத்தி தொழிலில் ஈடு பட்டுள்ள எந்தவொரு நிறுவனமும் அவர் களுக்கு தேவையான நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுத்துக் கொள்ளும் வகையில், உரிய சுற்றுச் சூழல் அனுமதி உள்பட எந்த துறையின் அனுமதியும் பெறாமல் தாரா ளமாக சுரங்கங்களை உருவாக்கி கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

உலகில் நிலக்கரி இருப்பு மிக அதிகமாக உள்ள நாடு இந்தியா. 286 பில்லியன் டன் அள விற்கு இதுவரை நிலக்கரி இருப்பு கண்டறி யப்பட்டுள்ளது. நிலக்கரியை வெட்டி யெடுப்பதில் உலகில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க நிறு வனமாக பொதுத்துறையின் இந்திய நிலக்கரி கழகம் (கோல் இந்தியா லிமிடெட்) உள்ளது. அடுத்தடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்படாதது, ஏற்கெனவே உள்ள நிறுவனங்களின் பலம் அதிகரிக்கப் படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிலக்கரி இருப்பு இருந்தும் அதை வெட்டி யெடுக்க முடியாமல், பெருமளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்கிறது. 2018 - 19 இல் மட்டும் 235 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மிக அதிகம். இதுதான் தமிழகம் உள்பட நாட்டின் பல பகுதி கள் உள்பட மின் உற்பத்தி மையங்களுக்கு பயன் படுத்தப்படுகிறது. இதன் சுமை நுகர்வோர் தலை யில் ஏற்றப்படுகிறது.

மறுபுறம், இந்தியாவில் இருப்பு உள்ள பெரு மளவு நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கான சுரங்கத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை முற்றிலும் அனுமதிப்பது என்று விதிகள் மாற்றப்படுகின்றன. இதன்விளைவாக பொதுத் துறை நிறுவனங்களின் வாயிலாக இந்திய மக்களுக்கு மின்சார உற்பத்தி, இரும்பு எஃகு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி என நியாயமாக சென்றடைய வேண்டிய நிலக்கரி சுரங்கங்களின் பலன், முற்றிலும் கார்ப்பரேட் கொள்ளைக்கான புதையலாக மாற்றப்படுகின்றன. இதன் உச்ச கட்டமாக, தற்போது கட்டுப்பாட்டை தன் கையில் வைத்திருக்கும் இந்திய நிலக்கரி கழகம் அரசாங்கத்தாலேயே சூறையாடப்படும். இது ஏதோ நிலக்கரி சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல; மின்சாரம் உள்பட அன்றாட வாழ்க்கை சம்பந்தப் பட்ட பிரச்சனை.

;