பிரதமர் நரேந்திர மோடி அண்மைக்காலமாக தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். முன்பெல்லாம் வெளி நாட்டுப் பயணம் மேற்கொள்வதில் காட்டிய ஆர்வம் இப்போது புனித தலங்களுக்குப் போவ தில் திரும்பியிருக்கிறது.
மோடி அவர்களே, ஆட்சியின் இறுதிக் காலத்தில் மக்களைச் சந்திக்க வேண்டும், அவர்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக எந்த முகத்தோடு செல்வது என்ற எண்ணத்தால் ஆன்மீக முகமூடி அணியத் துவங்கி விட்டீர்கள். ஊடகங்களில் எல்லாம் ‘மோடி அரசின் உத்தரவாதம்’எனும் விளம்பரம் நிறைந்திருக்கிறது. ஆனால் நீங்கள் எந்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்கள்?
விவசாயிகளை நாடாளுமன்ற வீதியில் ஓராண்டாய் திண்டாட விட்டுவிட்டு, இளை ஞர்களை வேலையின்றி தவிக்கவிட்டு நாட்டு மக்களை செல்லாப்பண அறிவிப்பால் செத்துப் பிழைக்க விட்டு, மணிப்பூரை பற்றி எரியவிட்டு, மல்யுத்த வீராங்கனைகளின் மனக் கொந்த ளிப்பை கேளாமல் மயங்கவிட்டு அதானி, அம்பா னிகளின் அபிலாசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, ஆர்எஸ்எஸ்-சின் உள்ளார்ந்த எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றினீர்கள்!
கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் அப்ப டியே தான் இருக்கின்றன! அதனால் மனச்சாட்சி உறுத்துகின்றதோ!
‘பாவம்’ செய்தவர்கள் ‘புண்ணியம்’ தேடி காசிக்குப் போவார்கள். நீங்கள் காசி தொகுதி யைச் சேர்ந்தவர் என்பதால் இராமேஸ்வரம் வந்தீர்கள். நிறைவாக ஆர்எஸ்எஸ்-சின் இலக்கான ராமர் கோவில் திறப்பையும் முடித்தீர் கள். ஆனாலும் கூட மக்களைச் சந்திக்கவும், அவர்களின் வாக்குகளைப் பெறவும் இது மட்டும் போதாது என்பதை உணர்ந்து பத்தாண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு இழைத்த அநீதி கள் தக்க பதிலடி தரும் எனப் பயந்தே இப்போது மாநிலம் மாநிலமாய் பறந்து அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுவும் போதாதென்று இப்போது துவாரகா வின் கிருஷ்ணனைத் தஞ்சமடைந்திருக்கி றீர்கள். கோவில்களுக்குப் போவது தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால் அதில் உங்க ளது பிரச்சாரம் தான் நகைப்புக்குரியதாக இருக் கிறது. 21ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் வளர்ச்சி என் கண்முன்னே வந்து சென்றது என்றும் கடலுக்கடியில் இருந்தபோது நாட்டை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற உறுதி வலுப் பட்டது என்றும் கூறியிருக்கிறீர்கள்.
ஆனால் உங்களது அரசின் நடவடிக்கைகள் நாட்டை ஆயிரமாண்டு பின்னோக்கிச் செல்லும் நடைமுறைகளாகத்தானே இருக்கின்றன. நீங்கள் மூன்றாவது முறையும் ஆட்சியில் அமர விரும்ப லாம். ஆனால் நாட்டு மக்கள் இன்னொரு வாய்ப்பை இனியும் வழங்கி தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. உங்களது ஆன்மீக நாடகத்தால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.