headlines

img

சூசாவின் சாகசம்

மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைசியில் இருந்த குற்றியாறு காட்டில் ஏராளமான காட்டுப்பன்றிகள் வாழ்ந்தன. பெரிய எதிரிகள் என்று யாரும் கிடையாது. புலி கிடையாது. சிறுத்தை கிடையாது. ஓநாய் கிடையாது. காட்டுநாய் கிடையாது. காட்டுப்பூனை கிடையாது. மலைப்பாம்பு கிடையாது. எனவே காட்டுபன்றிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.  அந்த மலையில் காட்டுப்பன்றிக் கூட்டத்துக்கான உணவும் தாராளமாகக் கிடைத்தன. புற்களைச் சாப்பிட புல்வெளிகள், சாறும் சுவையும் உள்ள தண்டுகள், தளிர் இலைகள் நிறைந்த செடிகள், இனிப்பான கிழங்குகள் உள்ள வேர்கள் என்று ஏராளமான உணவு இயற்கையில் இருந்தது. எனவே கவலை இல்லாமல் வாழ்ந்தன காட்டுப்பன்றிகள்.

ஒரு காட்டுப்பன்றிக் கூட்டத்துக்கு சூசா என்ற பெண்பன்றி தலைவியாக இருந்தது. சூசா தன்னுடைய கூட்டத்துக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டது. ஒவ்வொரு முறையும் ஐந்து அல்லது ஆறு குட்டிகளை சூசா ஈணும். அந்தக்குட்டிகளைக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கும். அப்படித்தான் போன நவம்பர் மாதம் சூசா குட்டிகளை அழைத்துக்கொண்டு இரை தேடப்போனது. புதரில் அது கட்டியிருந்த வீட்டில் இருந்து புறப்படும்போது ஆறு குட்டிகள் இருந்தன. கொஞ்ச தூரம் போனபிறகு பார்த்தால் ஐந்து தான் இருந்தன. சூசா குரல் கொடுத்தது. ம்ஹெஹே என்ற சத்தத்தைக் கேட்டதும் ஐந்து குட்டிகளும் தாயின் அருகில் ஓடி வந்து நின்றன. ஆனால் ஆறாவது குட்டியைக் காணவில்லை. மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தது. அன்று சூசா இரவு முழுவதும் தூங்கவில்லை. மறு நாள் மற்ற குடும்பத்தில் உள்ள தாய்மார்களும் அவர்களுடைய குட்டிகளில் ஒன்றைக் காணோம் என்று சூசாவிடம் வந்து சொன்னார்கள். சூசாவுக்குப் புரியவில்லை. எப்படிக் காணாமல் போகும்? யாராவது புதிய எதிரிகள் வந்திருக்கிறார்களா? என்று மண்டையைப் போட்டு குழப்பிக்கொண்டிருந்தது. இப்போது குட்டிகளை முன்னால் விட்டு சூசா பின்னால் போனது. கோரைக்கிழங்குச் செடியை வளைந்து நீண்ட தன்னுடைய கோரைப்பல்லால் குனிந்து நோண்டி மண்ணைக் கிளைத்தது. நிமிர்ந்து பார்த்தால் ஐந்தில் ஒரு குட்டியைக் காணவில்லை. சூசா கோபத்தில் கத்தியது. அது கத்தியவுடன் மற்ற காட்டுப்பன்றிகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன. காடு அதிர்ந்தது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே போகவில்லை. வீட்டுக்கு அருகில் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டு சுற்றிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது காற்று திசை மாறியது. மோப்பசக்தியில் கில்லாடியான சூசாவின் மூக்கில் ஒரு வாசனை வந்து மோதியது. அது..அது.. ஒரு புலியின் வாசனை….. என்னது புலியா? இந்தக்காட்டில் புலியா? சூசாவால் நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. உடனே அருகில் இருந்த அயினி மரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு அணிலிடம், “டேய் தம்பி உண்மையா இது?” டபக்கென்று திரும்பி வாலை ஆட்டிய காட்டு அணில், “எது உண்மையா?” “அதான் நம்ம காட்டில் புலி இருக்கா?” “ஓ அதுவா? எங்கிருந்தோ ஒரு கிழட்டுப்புலி வந்திருக்கு.. அதுக்கு ஓடவும் முடியல.. நிக்கவும் முடியல.. எங்கேயாச்சும் ஓடாமக்கொள்ளாம வேட்டையாடிக்கிட்டு இருக்கு.. ஏன் கேக்கிறே சூசாக்கா?” சூசா தன்னுடைய குட்டிகள் இரண்டு காணாமல் போன கதையைச் சொன்னது. காட்டு அணிலுக்குப் பாவமாக இருந்தது. “பார்த்து பத்திரமா இருங்க சூசாக்கா?” என்று சொல்லி படக்கென்று திரும்பி வாலை ஆட்டி விட்டு மரத்தில் ஏறியது. சூசா யோசித்தது. அப்படியென்றால் இங்கே தான் அருகில் எங்கேயோ இருக்க வேண்டும் அந்தக்கிழட்டுப்புலி.

இரவில் புதருக்கு அருகில் இருந்த ஆம்பல் குளத்தில் போய் சகதியில் குளித்தது. விடிய விடிய அதிலேயே ஊறிக்கிடந்தது. சூசாவின் உடம்பில் சகதி ஒட்டி ஒட்டி பயங்கரமாக ஆகிவிட்டது. காலையில் அது புதருக்கு வரும்போது நீண்ட அதன் பல்லைத்தவிர சூசாவின் உடல் எங்கும் கருப்பு நிறத்தில் சகதி படிந்து ஒரு புதிய வடிவத்தில் இருந்தது. சூசாவின் வீட்டுக்கருகில் இருந்த ஒரு பெரிய புதரில் தான் அந்தக்கிழட்டுப்புலியும் இருந்தது. சூசா தைரியத்துடன் அந்தப்புலியின் வாசனையை மோப்பம் பிடித்து அந்தப் புதரில் போய் நின்று கொடூரமாய் ஒரு குரல் கொடுத்தது. “யாரடா அது என்னோட ஏரியாவில் வந்து வேட்டையாடிக் கிட்டிருக்கறது..” புதரில் இருந்து வெளியே வந்த புலி சூசாவின் உருவத்தைப் பார்த்து பயந்து போனது. அதோடு சகதியின் நாற்றம் தாங்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டது. “நான் நான் தெரியாம வந்துட்டேன்.. நாளைக்குப் போயிடறேன்..” “என்னது நாளைக்கா? ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா.. உன்னை இப்பவே குத்திக்கிழிச்சி குடலை உருவி காலை டிபனாச்சாப்பிடலை… என் பேரு சாசூ..ஊஊஊ.. இல்லை..”

புலி பயந்து போனது. ஆனால் இடத்தை விட்டு அசையவில்லை. சூசா இரண்டடி முன்னால் எடுத்து வைத்து கோரைப்பல்லை தரையோடு தேய்த்தது. தரையில் அரையடி ஆழத்துக்குக் கோடு விழுந்தது. அவ்வளவு தான் புலி எடுத்தது ஓட்டம். சூசா விடவில்லை. பின்னாலேயே விரட்டிக்கொண்டு ஓடியது. புலிக்கு பின்னால் துரத்திக்கொண்டு வந்த அந்த பயங்கர மிருகத்தை விட அதனுடைய நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. தலைகுப்புற விழுந்து ஓடி குற்றியலூர் காட்டை விட்டே மறைந்து போனது. நல்லவேளை. புலி திரும்பிப்பார்க்கவில்லை. சூரியவெளிச்சத்தில் சூசாவின் மீது ஒட்டியிருந்த சகதி எல்லாம் உதிர்ந்து போய் அதன் மாறுவேடம் கலைந்து போயிருந்ததைப் பார்த்திருக்கும். சூசாவின் தந்திரம் பலித்து விட்டது. அதன்பிறகு அந்தக்காட்டில் காட்டுப்பன்றிகள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தன.

;