கதிர்வேல்-கல்பனா இருவரும் ஒரே கல்லூரியில் படித்தார்கள். காந்திசிலை பேருந்து நிறுத்தத்தில் தினந்தோறும் பஸ் ஏறுவார்கள். “இந்த நம்பர் பஸ் போயிடுச்சா…? மினி பஸ் எப்ப வரும்..? இப்படிப் பேசத் தொடங்கிய பேச்சு, போகப் போக… சினிமா, சீரியல், கிரிக்கெட் பற்றிய உரையாடலாக உருமாறியது. நாட்கள் நகர… நகர.. இவர்களின் பழக்கம் காதலாக மலர்ந்தது. அதன் பிறகு எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டே திரிந்தார்கள். கல்லூரியில் எதாவது விழா நடக்கும் போது கூட தனியாக அமர்ந்து பேசிச் சிரிப்பர்கள். அப்படி என்னதான் அரட்டை அடிப்பார்கள் என்று எல்லோருமே ஆச்சரியப்படுவார்கள். நாட்கள் ஓடின. கல்லூரி வாழ்க்கை முடிந்தது. கதிர்வேலுக்கு கவுரவமான வேலை கிடைத்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் கதிர்வேல்-கல்பனா திருமணம் நடந்து, கணவன்-மனைவி ஆனார்கள். ஹனிமூன், கல்யாண விருந்துகள் முதலியனவற்றிற்குப் போன போது கூட கலகலப்பிற்குப் பஞ்சமில்லை. நாளாக… நாளாக.. தம்பதியருக்குள் பேச்சுக்கள் கொஞ்சம் கொஞ்மாக குறையத் தொடங்கிற்று. இத்தனைக்கும் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏதுவும் கிடையாது. இந்த நிலமை மாற்றத்திற்கு என்னதான் காரணம்…? எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சிதான். மற்றவர்களின் முகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக தங்களது செல்போனையே விடாது பார்க்கப் பழகிப் போனார்கள். அவர்களிடம் வியாபித்திருந்த அன்னியோன்யத்தை அலைபேசி என்ற அரக்கன் கொலை பண்ணி விட்டான்.